24/05/2021

கண்ணும் கண்ணும்---வள்ளுவர் திங்கள் 160


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

#வா_மூன்று
🌺🌺🌺🌺🌺
கண்ணோடு கண்கவ்வும் காதல் விளையாட்டை
என்னோடு நீஆட வா
(1)

இம்சை பொறுக்காமல் எம்இமைகள் பேசுவதை
உம்காதில் நீகேட்க வா
(2)

உன்நாட்டம் வந்ததுமே உள்ளூரப் பாய்கின்ற
மின்னோட்டம் நீபார்க்க வா
(3)

#பார்_மூன்று
🌺🌺🌺🌺🌺🌺
வியந்து வியந்தே விரிகின்ற தாலே
அயர்ந்த புருவத்தைப் பார்
(4)

காஞ்ச கருவாடாய்க் காய்கின்ற என்மீது
வாஞ்சை உணர்வோடு பார்
(5)

இதழின் சிவப்பை இமைகளில் நீக்கிப்
பதமாய்ப் பரிவோடு பார்
(6)

#நீ_மூன்று
🌺🌺🌺🌺🌺
விழியால் அடைகாக்கும் மீனினம் போலே
விழியால் அணைக்கின்றாய் நீ
(7)

ஒலியாய் மொழியா உலகின் மொழியாம்
விழியால் விதைக்கின்றாய் நீ
(8.)

இடம்வலம் போகும் இருவிழி கொண்டே
படக்கென்று பாய்கின்றாய் நீ
(9)

#சொல்_ஒன்று
🌺🌺🌺🌺🌺🌺🌺
புருவத்தை மேலேற்றி புன்முறுவல் பூக்கும்
ஒருகணம் போதாதா சொல்?
(10)

#வள்ளுவர்_திங்கள்_160

No comments: