26/11/2021

கூண்டுக்குள் பூட்டிவைத்துக் கூப்பிட்டோம் என்பதற்கா...

 

 

பல நாட்களுக்குப் பிறகு இன்று தோகாவில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அல்கோர் பூங்கா சென்றுவந்தோம். இம்முறை எம் பள்ளி நண்பரான நாகராஜ் குடும்பத்தோடு சேர்ந்து கட்டுச்சோறெல்லாம் கட்டிப்போய் அங்கேயே சாப்பிட்டு விட்டு சுற்றிப்பார்த்து வந்தோம். இப்போது ஒரு நபருக்கு 15 ரியால் (300 ரூபாய்) வாங்குகிறார்கள் (பத்து வயதிற்குக்கீழ் என்றால் 10 ரியால்). போனவுடன் சாப்பாடை ஒருபக்கம் வைத்துவிட்டு சிங்கம் புலி சிறுத்தை என்று விலங்குகளைப் பார்த்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். பிறகுதான் வாழ்வில் மறக்க முடியாத ஓர் நிகழ்வு நடந்தது.

ஆம்.... குரங்கு இருக்கும் பக்கம் போனோம். ஒரு குரங்கு 🐒 அமைதியாக அதுபாட்டுக்கு அமைதியாக இருந்தது. மற்றொரு குரங்கு 🐒 ஒருபக்கம் ஒடு டயரை உருட்டிக்கொண்டு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தது. நான் ஒருபக்கம் பிள்ளைகளோடு நின்றுகொண்டு கம்மான் கம்மான் என்று கத்தினேன். அப்போது அந்தக்குரங்கு தன் டயரைப் போட்டுவிட்டு படுவேகமாகப் பாய்ந்துவந்து அந்தக் கூண்டின் கம்பியைப் பற்றி புச்சென்று வாயில் வைத்திருந்த நீரைத் துப்பியது பாருங்கள்......அந்த இடமே ரணகளமாகி பின் சுதாரித்துக்கொண்டு சிரிப்பு மழையில் நனைந்தது. அப்புறம் துவட்டிவிட்டு பூங்காவைச் சுற்றிப்பார்த்து வீடுவந்து சேர்ந்தாலும் அந்நிகழ்வு மறக்க முடியாத நிகழ்வாகி இன்னும் சிரிப்பை வரவைக்கிறது. (ஏன்டா உனக்கு வெக்கமே இல்லையான்னு.... நீங்கள் கேட்பது கேட்கிறது 😀😀😀...அது எப்படி....யாருக்கிட்ட?!!...ஆங்...)
 
கூண்டுக்குள் பூட்டிவைத்துக்
...கூப்பிட்டோம் என்பதற்கா
காண்டாகி எங்கள்மேல்
...காறிநீர்த் துப்பிவிட்டாய்
ஆனாலும் உன்சேட்டை
....ஆனந்தம் தந்ததால்
தேனாய் இனிக்கும் தினம்!
 
✍️செ. இராசா

No comments: