08/11/2021

நல்லதே செய்தாலும் -------- வள்ளுவர் திங்கள்-184

 #நல்லதே_செய்தாலும்
#வள்ளுவர்_திங்கள்_184

 

எல்லாம் தெரியுமென எண்ணிடும் பேருக்கு
நல்லது சொன்னாலும் நஞ்சு
(1)

கண்டால் நடிக்கின்ற காரிய வாதிகள்
பின்னாலே சொல்வர் பிழை
(2)

பணத்தை அளவாக்கிப் பார்க்கின்ற நட்பை
பிணமாய்க் கருதிப் பிரி
(3)

தன்னைப் பெரிதென்றே தம்பட்டம் செய்வோர்கள்
விண்ணையும் சொல்வார்கள் வீண்
(4)

காசுபணம் வாங்காமல் கற்பித்த ஆசானை
மாசுபடப் பேசுவதா மாண்பு?!
(5)

காசிற்காய் வாலாட்டும் கையூட்டு விற்பனரை
தூசிபோல் எண்ணித் துற
(6)

கற்றதை எல்லாமும் கற்பிக்க எண்ணாமல்
நற்பண்(பு) இருந்தால் நவில்
(7)

கொடுக்கக் கொடுக்கக் கொடுக்கின்ற பட்டம்
கொடுக்காமல் போனால் கெடும்
(8.)

உறவினைச் சொல்லி உரையாடி பின்னே
மறப்பது தீயோர் மதி
(9)

என்னதான் செய்தாலும் எண்ணிட எண்ணாதார்
என்றும் குறைசொல்வார் இங்கு
(10)

✍️செ. இராசா

No comments: