10/11/2021

பிறந்ததன் காரணம் புரியவும் இல்லை

பிறந்ததன் காரணம் புரியவும் இல்லை!
இறந்தபின் யாதெனத் தெரியவும் இல்லை!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையினில் தொல்லை!
மறப்பதும் துறப்பதும் அவரவர் எல்லை!

ஈருடல் இணைந்ததில் எத்தனை உயிர்கள்?
ஓருயிர் அணுவிலும் எத்தனை உயிர்கள்?
நீரிலும் நிலத்திலும் எத்தனை உயிர்கள்?
பேரண்டம் முழுவதும் எத்தனை உயிர்கள்?

எப்படி இப்படி எங்கிலும் வந்தோம்?
அப்படி எப்படி அனைவரும் அறியோம்!
முற்படி எப்படி முன்னரே கண்டோர்
சொற்படி நற்படி தொற்றிடப் பாரீர்!

சென்றவர் வந்ததாய் சேதியும் இல்லை
வந்தவர் நின்றிட வாய்ப்புகள் இல்லை
வந்தவர் போவது வாடிக்கை என்றால்
நொந்தவர் நோவது வேடிக்கை அன்றோ?!

✍️செ. இராசா

No comments: