15/11/2021

நீர்த்தடம் மாறினால்---------வள்ளுவர் திங்கள்- 185



ஏரியைத் தூர்த்ததில் ஏற்றுகின்ற கட்டிடத்தால்
மாரிநீர்க் கில்லை வழி
(1)

பேர்தான் பெருநகரம் பெய்தால் பெருநரகம்
யார்தான் சரிசெய்வார் இங்கு?!
(2)

ஊழல் பெருவெள்ளம் ஓடுகின்ற மாநகரின்
சூழல் பெருவெள்ளம் தான்
(3)

நதியில் உருவான நாகரிகம் இன்று
நதியை மறைப்பதா நன்று?!
(4)

நீர்த்தேக்கம் இல்லாமல் நீர்மட்டம் கீழ்ப்போக
நீர்ப்பிச்சைக் கேட்கும் நிலை
(5)

நீர்நீர் எனச்சொல்வோர் நீர்நீர் எனச்சொல்வார்
நீர்வண்டி பின்னாலே நின்று
(6)

அழுக்காறு கொண்டோர் அரசியல் செய்தால்
அழுக்காறு தான்பாயும் அங்கு
(7)

கூவத்தை மாற்றுவதாய்க் கூவிய கூட்டத்தால்
கூவத்தில் ஆனதென்ன கூறு
(8.)

இவரை அவரும் அவரை இவரும்
தவறென்றால் யார்தான் சரி?
(9)

ஆக்கிரமிப்பு செய்த அதிகார வர்க்கத்தால்
போக்கிடம் இல்லாப் புனல்
(10)

✍️செ. இராசா


No comments: