01/11/2021

திருடாதே-----------வள்ளுவர் திங்கள் 183




ஒருவர் புகழை ஒருவர் பறித்தல்
திருட்டில் பெரிய திருட்டு
(1)

திருட்டிலே என்ன சிறிது பெரிது
திருடிடும் எண்ணமே தீங்கு
(2)

படைப்பைத் திருடும் பரதேசிக் கூட்டம்
கடைவரைப் போகாது காண்
(3)

திட்டங்கள் போட்டுத் திருடிடும் கூட்டத்தார்
சட்டத்தில் பார்க்கிறார் சந்து
(4)

கடனட்டை தந்து கடனாளி யாக்கி
கடைசியில் வைப்பார்பார் கை
(5)

உருகி உருகி உதட்டளவில் பேசி
உருவுவார் காசை உணர்
(6)

வாய்ப்புகள் வேண்டி வருகின்ற கூட்டத்தை
ஏய்ப்போரும் கள்வர்தான் இங்கு
(7)

அடுத்தவர் நேரத்தை அப்படியே பற்றிக்
கெடுப்போரும் கள்வர்தான் கேள்
(8.)

பாசத்தைக் காட்டிப் பறிக்கின்றோர் யாவர்க்கும்
மோசமாய்ப் போகும் முடிவு
(9)

இணையம் வழியேதான் ஏய்க்கின்றார் இன்று
நினைவில் இதனை நிறுத்து
(10)

✍️செ. இராசா

(படம்: எம் வீட்டில் உள்ள வள்ளுவர்)

No comments: