26/06/2020

குறளுரையாடல்_3



#குறளுரையாடல்_3

என்ன இது தொடர்ந்து கொண்டே போகிறதே எனப் பார்க்கின்றீர்களா?!.
ஆம்; இது எல்லாம் அவன் செயல் என்பதுபோல் இது எல்லாம் திரு அகன் மாமா ஒத்துழைப்பால் விளைந்த செயல். தமிழ் கூறும் நல்லுலகம் இலக்கணச் செம்மல் அகன் மாமாவை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. (என் மனைவியை மகளாக ஏற்ற நாள் முதலாய் நான் மாமா என்றே பிரியமுடன் அழைக்கின்றேன்) அவரோடு இதற்கு முன்பும் குறள் வெண்பாவில் இப்படி உரையாடியுள்ளேன் என்றாலும், இம்முறை ஒரு தொடரோட்டமாக என்னோடு அவர் கலந்து கொண்டது என்பது அவரின் அளப்பரிய பெருந்தன்மையையே காட்டுகிறது என்றால் அது மிகையல்ல.....(என் தவறுகளை அடிக்கடிச் சுட்டிக் காட்டி என்னைச் செதுக்கிய கண்டிப்பான ஆசான்களில் மூத்தவர் மட்டுமல்ல முக்கியானவரும்கூட)

மனமார்ந்த நன்றி மாமா...

இதோ உங்களின் பார்வைக்காக...

#மாமா_1
குறளுரை யாடல் கொலுவுரை யாடல்
மறவர்க் கியல்பது மாண்பு.

#நான்_2
மாண்புமிகு மாமாவின் வாழ்த்துகள் கிட்டினால்
சான்றிதழ் வேறெதுக்கு சொல்

#மாமா_3
தரமுள்ள தைவாழ்த்து தல்நன்றே என்றும்
சிரமுள்ள தைப்போற்றல் சீர்.

#நான்_4
சீர்படுத்த வேண்டுமென செந்தமிழில் சொல்லிவிட்டு
பார்த்தீரா செய்கின்றார் பாழ்

#மாமா_5
பாழாக்கு வோர்க்குப் பதில்சொல்லி யாதுபயன்
ஆழாக்கே ஆனாலும் ஆங்கு.

#நான்_6
ஆங்கொன்று பேசியதை அப்படியே மாற்றிவிட்டு
வாங்கிக் குவிப்பதா வாழ்வு

#மாமா_7
வாழ்வதே வாழ்வென்று வாழ்பவர்கள் வாழ்க்கையில்
தாழ்வொன்றே தானடைக்கும் தாழ்.

#நான்_8
தாழ்ந்து வணங்கியே தன்னை வளர்ப்போர்க்கு
வீழ்ந்தபின் கிட்டுமா வீடு

#மாமா_9
வீட்டில் இருந்தே விழுதுவிடும் நற்பண்பு
நாட்டுக் கதுதானே நன்று.

#நான்_10
நன்றிப் பெருக்கோடு நல்லறம் செய்வோர்க்கே
என்றைக்கும் இல்லை இழப்பு

#மாமா_11
இழப்புகள் என்றும் இயன்பென் றுணர்ந்தும்
உழவன் உழைக்கிறான் ஊர்ந்து.

#நான்_12
ஊர்ந்து தவழ்ந்திட்ட ஒத்திகைதான் பின்னாளில்
நேர்ந்திடும் அஃதே நினை

#மாமா_13
நினைப்பவை எல்லாம் நிலைப்பதில்லை என்றும்
தினையும் உதவும் சிறப்பு.

#நான்_14
சிறப்பான செய்கையை செய்கின்ற போதே
மறக்காது மாந்தர் மனம்

#மாமா_15
மனம்போல வாழ்வு மறவாதே நண்பா
தினம்காக்க வேண்டும் செயல்

#நான்_16
செயலின் விளைவாய் சிவனே வருவான்
சுயநலம் இன்றித் தொடங்கு

#மாமா_17
தொடங்குவ தெல்லாம் தொடரா முடிவில்
மடங்குவ தொன்றே மதி.

இத்துடன் தற்காலிகமாக நிறைவு பெறட்டும் ராசா... வாய்ப்பு கிடைக்கும் போது தொடரலாம்..என்று நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாமா அளித்த பதிலோடு முடிந்தது குறளுரையாடல்_3.

#தமிழ்_இனிது

✍️மாமாவுடன் செ. இராசா

No comments: