28/04/2018

விழிகள் திறந்தவுடன்



விழிகள் திறந்தவுடன்- உனை
விரலால் தீண்டுகின்றேன்- உன்
இமைகள் திறந்தவுடன்- என்
இதழால் சிரிக்கிறேன்- உன்

முகத்தில் முகம் பார்த்தே- என்
முழுநாளையும் கழிக்கிறேன்- என்
கண்கள் உறங்கும்வரை- உனைக்
கைகளால் தாங்குகின்றேன்!

ஐயோ விழுந்துவிட்டேன்- உன்
அடிமையாய் மாறிவிட்டேன்- நீ
விரித்த வலையினிலே- நான்
விழுந்தவன்(ள்) ஆகிவிட்டேன்- என்

காலத்தை வீணடிக்கும்- உன்
ஜாலத்தை நிறுத்திடுவேன்- உன்
மாய வலை அறுக்க- என்
மதிக்குச் சொல்லிவிட்டேன்- நீ

அடிக்கடி உரசிடவே- இனி
அனுமதி உனக்கில்லை- ஒரு
அளவுடன் பழகிடவே- நான்
அனுமதி தந்திடுவேன்- இனி

முகநூல் வலையினிலே- என்
மதிநூல் மயங்காது- சில
கட்செவி அழைப்பெல்லாம்- இனி
என்செவி கேட்காது!

---செ. இராசா

No comments: