19/04/2018

நான் தமிழுடன் பேசினேன்



நான் தமிழுடன் பேசினேன்...ஆம்
நான் தமிழோடு பேசினேன்..

தொலைப்பேசி வாயிலாக
தொன்னூறு நிமிடங்கள்..
விலைபேசி கணக்கிட்டால்
பலநூறு வைரங்கள்...

அப்பப்பா என் சொல்வேன்
அத்தனையும் அற்புதங்கள்..


தொல்காப்பியர் வந்தபோதே
கண்ணதாசர் கூட வந்தார்
வைரமுத்து வந்தபோதே
கலைஞரும் வந்துவிட்டார்

விசில் சத்தம்
விண்ணைப் பிளக்க
வீறுகொண்டார்
விக்டர் தாசர்..:

வீரத்தமிழ்ச் சொல்லாலே
வெற்றி கண்டார்
வெற்றி தாசர்...

தமிழாலே உரையாடல்
தமிழோடு உரையாடல் ...
வருங்கால உரைகளுக்கு
கருவான சொல்லாடல்...
உயிரான தமிழாடல்....

களிப்போடு பேசும்போதே
கனல்மூட்டும் களம்சென்றார்
ஆறுவது சினமென்றே
அறிந்ததால் அமைதியுற்றார்

அடுத்த கடமைபற்றி
அடுத்தடுத்து எடுத்துச்சோல்லி
அகத்தில் அன்போடு
அண்ணனவர் விடைபெற்றார்..

நான் தமிழுடன் பேசினேன்...ஆம்
நான் தமிழோடு பேசினேன்..

அன்புடன் தம்பி
செ. இராசா

பிற்சேர்க்கை:
***************
தூத்துக்குடித் துயரங்களும்
துக்கமான நிகழ்வுகளும்
தொண்டையை அடைத்ததினால்
தொடாமல் விட்டுவிட்டேன்
மன்னியுங்கள் அன்பு அண்ணா...

சொல்ல முடியா சோகத்தினை
கொல்ல முடியா பாவிகளை
சொன்னாலும் குத்தமென்றே
சொல்லாமல் விட்டுவிட்டேன்
மன்னியுங்கள் அன்பு அண்ணா..

No comments: