19/04/2018

கர்மவீரர் காமராசர்



மன்னராட்சிக் காலமெனில்
சோழராசர் ஆண்டகாலம்!
மக்களாட்சிக் காலமெனில்
காமராசர் ஆண்டகாலம்!

கற்காலக் காலம்தொட்டு
தற்காலக் காலம்வரை
பொற்காலச் சரித்திரமாய்
போற்றிடலாம் இரண்டையுமே!

கல்வியாளர் விழுக்காட்டை
கணிசமாக உயர்த்தியவர்
கற்காத மேதையான
கர்மவீரர் காமராசர்!

நீருயரும் பொழுதினிலே
பாருயரும் என்றறிந்து
நேருக்கு நேர்நின்றே
நீருயரச் செய்தவர்!

எதிர்த்தவரும் தோற்றவரும்
எதிரணியில் இருந்தாலும்
அமைச்சராய் அமரவைத்து
அழகுசெய்த பண்பாளர்!

சற்றும் ஆசையில்லா
பற்றில்லாத் துறவியர்!
தோற்றாலும் துவளாத
ஏற்றமிகு வீரரவர் !

தமிழினம் உயரவைத்த
தமிழ்நாட்டுக் காந்தியவர்!
தமிழனாய் உயர்ந்து நின்ற
தமிழறத் தலைவரவர்!

--செ. இராசா---

No comments: