04/07/2020

கோபம்

கோபம் கொள்ளாதே‌ என்றால்
கோபத்தில் கொந்தளிப்பவரா நீங்கள்
எனில் சற்றே வாருங்கள்...
கோபம் கொல்வோம்

வெகுளாமை வேண்டுமென்று
வள்ளுவன் சொன்னால்
ஆறுவது சினமென்று
ஔவை சொல்கின்றார்!

கோபத்தைத் துறந்துவிட
கௌதமர் சொன்னால்
ரௌத்திரம் பழகென்று
பாரதியார் சொல்கிறார்;எனில்
கோபம் கொள்வதா?! இல்லை
கோபத்தைக் கொல்வதா?!

அதுசரி...
எதையும் பறித்த வேகத்தில்
ஏங்கி அழுகிற குழந்தைக்கு
எங்கிருந்து வந்தது கோபம்?!
குஞ்சுகளைக் காக்கிற நோக்கத்தில்
கொக்கரித்துப் பாய்கிற கோழிக்கு
எங்கிருந்து வந்தது கோபம்?!

எனில் கோபம் பிறப்புரிமை தானே?!

சாத்தான் குளங்களில்
சாமானியர்கள் சாகும்போதும்
சிவனே என்றிருந்தால்
சிவனும் மன்னிப்பானா?!

சீனாக்காரன் சீண்டுகையில்
சிப்பாய்கள் நோகும்போது
வாய்மூடி இருந்தால்
வாய்க்கரிசி கிட்டாதா?!

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்

பெற்றோரின் கோபம்
பிள்ளைகளுக்கு வழிகாட்டும்
கற்றோரின் கோபம்
சமூகத்திற்கு நெறியூட்டும்

எண்ணம் மிகையுற்றால் ஆசையாகும்
ஆசை தடைபட்டால் கோபமாகும்
கோபம் சிதைவுற்றால் நாசமாய்ப்போகும்
ஆனால்....
கோபம் செறிவுற்றால் ஞானமாய் மாறும்
ஆம்
#கோபம்_தெளிவுற்றால்_ஞானமாய்_மாறும்

✍️செ.இராசா
04.07.2020

No comments: