11/07/2020

தமிழ் அமுது


இன்று என் மகளின் மூன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தைப் புரட்டினேன். என்ன ஆச்சரியம்?! முதல் பாடலாய் கவியரசர் எழுதிய "தமிழ் அமுது" என்ற பாடல் இருந்தது. எவ்வளவு எளிமையான எழிலான பாடல். ஆகா‌‌...ஆகா... அனைத்து வரிகளும் அழகோ அழகு.

கவியரசரின் பாடல்களை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கியவர்களும் உண்டு இன்னும் வாங்குபவர்களும் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான். ஆனால், சிறுவர்களும் அவரின் கவிதைகளைப் பாடமாகப் படிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நல்ல நோக்கத்தை அறிந்த போது உண்மையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் நோக்கிலேயே இப்பதிவை எழுத நினைத்தேன்.

ஒருகாலத்தில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்திற்கு அதன் குறைகளைக் கவியரசர் சுட்டிக்காட்டினாராம். அதாவது கொன்றை வேந்தனில்... "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற வரிகளுக்குப் பிறகு வரும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்ற வரிகளை நீக்கிவிட்டார்களாம்‌. காரணம் திமுகவின் கொள்கையில் ஆலயம் போவது தவறு என்ற கொள்கை இருந்ததால் ஔவையார் வரிகளையே நீக்கி விட்டார்கள். (தமிழ்த்தாய் வாழ்த்தில் கைவைத்தது போலவே) அதை வன்மையாகக் கண்டித்து நீதிக்காகப் போராடினார் நம் கவியரசர். இன்று அதே தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் அவரின் பாடலையே முதற்பாடலாக வைத்தது வரலாற்றுச் சாதனை அல்லவா?!!

✍️செ.இராசா


பொதுவாக நம் பதிவுகள் பிறரால் விரும்பப்படுமாயின் நாம் மகிழ்ச்சி அடைவோம். அதுவே அப்பதிவு பிறருக்கும் சேரட்டும் என்ற நோக்கத்தில் பகிரப்படுமாயின் மேலும் பெருமகிழ்ச்சி அடைவோம்‌. அப்படிப் பகிர்பவர்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமான ஆளுமையாக இருந்தால்....... ஆகா ஆகா சொல்லவே வேண்டாம்.
ஆமாங்க.... நம்ம பதிவைத் திரு. காந்தி கண்ணதாசன் ஐயா பகிர்ந்துள்ளார்கள் என்பதை நான் பெருமையாக மட்டும் அல்ல கவிக்கடவுளின் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.
மனமார்ந்த நன்றி ஐயா



✍️செ. இராசா

No comments: