28/08/2019

சேலையில தூளி கட்டி



சேலையில தூளி கட்டி
சீரா நல்ல பாட்டு கட்டி
செல்லங்கள தூங்க வச்சோம் அப்போ!
கக்கத்துல பேபி வச்சு
பக்கத்துல டேபு வச்சு
செல்லங் காட்டி கெஞ்சுறாங்க இப்போ!

ஆடுமாடு கோழி காட்டி
ஆகாயத்தில் நிலவு காட்டி
சோறு ஊட்டி வளர்த்ததெல்லாம் அப்போ!
தட்டிதட்டி சேனல் மாற்றி
குட்டிசுட்டி படத்த ஓட்டி
டிபன் திங்க சொல்லுறாங்க இப்போ!

காலுமேல குத்த வச்சு
மேலுமேல தண்ணி ஊத்தி
குளிக்கவச்ச காலமெல்லாம் அப்போ!
சிட்டிங் சேரு மேல வச்சு
புட்டிப் பாட்டில் வாயில் வச்சு
கொடுமைகட்டி அடிக்கிறாங்க இப்போ!

மண்ணுமேல கைய வச்சு
ஒன்னு ரெண்டு எழுத வச்சு
படிக்க வச்ச காலமெல்லாம் அப்போ!
யூடிபில பாட்டப் போட்டு
நோட்பேடுல குந்திக் குட்டு
என்னென்னமோ செய்யுறாங்க இப்போ!

பம்பரங்கள் ஆடிக் கிட்டு
பச்சக் குதிரைத் தாண்டி வந்து
கபடியெல்லாம் ஆடுனாங்க அப்போ!
டெம்பில் ரன்னில் ஓடிக்கிட்டு
பப்ஜி கேமு ஆடிக்கிட்டு
லெவலத் தாண்டி ஓடுறாங்க இப்போ!


(இதுக்கு மேல எழுதினால் நமக்கு அடிவிழுமோ....ச்சும்மா...😊😊😊)

✍️செ. இராசா

*இந்தப் படம் பார்த்தவுடன் தோன்றிய கற்பனையே...இந்த சந்தப்பாடல். மனமார்ந்த நன்றி கிராமத்து வெ. வயிரவன் ஐயா🙏🙏🙏

No comments: