17/08/2019

கைக்குள் நுழைந்தே கட்டிப் போட்டுவிட்டாயே..



நீ..
அதிகாலையில் கூவும்
அறைகூவலில்தான்-இங்கே
அனைவரின் விடியலும்!

நீ..
அவ்வப்போது எழுப்பும்
அலையொலியில்தான்- இங்கே
அனைவரின் சுவாசமும்!

இங்கே உன்
மின்கலம் மட்டும்
மண்டையைப் போடுமானால்:
உடனே உந்தன்
மறு ஆயுளுக்கு
மணுபோட ஆயத்தமாவோம்!

இங்கே உன்
செயலிகள் மட்டும்
செயலிழக்குமானால்
உடனே எங்கள்
செல்களும்
செத்ததுபோல் சலிப்படைவோம்!

ஆனால் ஒன்று
இங்கே உன்னால்தான்
மொட்டை மாடியும்
பால்கனிகளும் சும்மாவே உள்ளன.
வேண்டுமானால்
நிலாவைக்காட்டி சோறூட்டிய
அம்மாக்களைக் கேள்..

இங்கே உன்னால்தான்
தெருவெல்லாம் அமைதியாகவே உள்ளன
வேண்டுமானால்
பிள்ளைகளோடு விளையாண்ட
அப்பாக்களிடம் கேள்..

என்னது பிள்ளைகள்
விளையாடுகிறார்களா?!

அடஆமாம்
இன்னும் விளையாடுகிறார்கள்
வீடியோகேமில் மட்டும்

என்னே உந்தன் மாயை?!

கைக்குள் நுழைந்தே
கட்டிப் போட்டுவிட்டாயே..

விரும்ப வைத்தே
விலங்கிட்டுவிட்டாயே..

✍️செ. இராசா

No comments: