30/08/2019

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா!!



பாரி முதல் காரி வரை
பாரிலுயர் சரித்திரமும்
கலைஞர் முதல் கவிக்கோ வரை
கலக்கியவர் கதைகளையும்
கண்ணன் முதல் திண்ணன்* வரை
கடவுள்பக்தி வரிகளையும்
என்னெழுத்தில் எழுதியதை
எத்தனை பேர் படித்தீரோ?!

பாரதியின் சாடலிலே
பாமரன்நான் முயன்றதையும்
வள்ளுவரின் வரிபிடிக்க
தெள்ளுத்தமிழ் பயில்வதையும்
கவியரசர் நடைபிடிக்கத்
தவியாகத் தவிப்பதையும்
என்னோடு பயணிக்கும்
எத்தனைபேர் அறிவீரோ?!!

வெண்பாவைப் படைத்திடவே
கண்பாவைத் துடிப்பதையும்
துளிப்பாவை** எழுதிடவே
துடிப்போடு இருப்பதையும்
புதுக்கவிதை செய்திடவே
புதியநடை பிடிப்பதையும்
என்னோடு நட்பாடும்
அன்பானோர் அறிவீரே!!!

எண்ணிக்கையில் குறைவெனினும்
எண்ணத்திலே உயர்ந்தோரே;
என்னெழுத்தில் ஏதேனும்
உண்மையிலே குறையிருந்தால்
என்னகுறை எனச்சொல்லி
பின்னூட்டம் இடுவீரா?!
உங்களிடம் இன்றைக்கு
உரிமையோடு கேட்கின்றேன்....!!

✍️
செ. இராசா

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா!!
😊😊😊😊

*திண்ணன்- கண்ணப்ப நாயனார்
**துளிப்பா- ஹைக்கூ

No comments: