24/03/2018

ஆறுதல் மொழி



எதை நான் எடுப்பதென்றும்
எதை நான் விடுவதென்றும்
என்னுள்ளம் படும்பாட்டை
எங்கே நான் முறையிடுவேன்...?!!

வந்தவற்றில் மகிழ்வேனா
வராதவையால் வருந்துவேனா?!
யாதென்று சொல்லிடுவேன்
யாரிடம் நான் முறையிடுவேன்...?!!

ஒன்றாய்ப் பிறந்தவற்றில்
ஓரவஞ்சனை செய்தேனாம்...
வராத அத்தனையும்
வாய்விட்டு அழுகிறதே.....

ஒன்றாய் அவை கூடி
ஓ... வென்று அழும்சத்தம்
ஓரமாய் என் காதில்
ஓயாமல் ஒலிக்கிறதே.......

அனைத்தையும் ஏற்றிடவே
ஆசையுடன் முயன்றேனே....
ஆயினும் அதனுள்ளே
அடக்கிட முடியலையே.....

அடுத்த புத்தகத்தில்
அனைவருமே சென்றிடலாம்...
அதுவரையும் உறவுகளே
அன்போடு வாழ்த்துங்களேன்....

#அச்சில்_ஏறாத_கவிதைகளுக்கு_ஆறுதல்_மொழி

No comments: