15/03/2018

நான் கருப்பானவன்......



சிவப்பான பெண்னென்றால்
சீர்வரிசை வேண்டாமாம்...
கருப்பான ஆணொருவன்
கரிசனம் காட்டுகின்றான்

பிஞ்சு பிறந்ததுமே
அள்ளி அள்ளி கொஞ்சுகின்றான்....
பிறந்தது சிவப்பென்றால்
பல்லெல்லாம் காட்டுகின்றான்....

கருப்பாய் இருந்தாலும்
கலையாக உள்ளானாம்....
மாநிறமே ஆனாலும்
மலர்போல பேரழகாம்....

ஆமாம்,
அது என்ன "இருந்தாலும், ஆனாலும்"
அனைவருமே சொல்லுகின்றீர் ...
அடிமனதில் ஒரு கருத்தை
ஆழமாய் விதைக்கின்றீர்.....

வார்த்தையின் உள்ளர்த்தம்
வார்த்திடும் சேதி என்ன?

சிவப்பென்றால் புரட்சியென்றும்
கருப்பென்றால் துக்கமென்றும்
யார் சொன்ன அர்த்தமிது?

வெளுப்பென்றால் தூய்மையென்றும்
மஞ்சளென்றால் மகிமையென்றும்
யார் சொன்ன விளக்கமிது?

நிறத்திலே பேதம்கண்டு
நிஜத்தினை மறக்காதீர்...

மனிதனில் பேதம்கண்டு
மனிதத்தைத் துறக்காதீர்....

இப்பொழுது சொல்லுகின்றேன்...
இறுமாப்போடு சொல்லுகின்றேன்

நான் கருப்பானவன்......

--செ. இராசா---

No comments: