19/03/2018

பழைய கஞ்சி







அன்பான மனைவி இன்று
அமிழ்தமான உணவளித்தாள்....
ஆனாலும் அவளுக்கு
அவ்வுணவில் விருப்பமில்லை

அசதியில் சில கணங்கள்
அவள் இன்று உறங்கியதால்
அதிகாலை உணவுசெய்ய
அவளாலே இயலவில்லை....
அதனாலே வருத்தத்துடன்
அவளெனக்கு உணவளித்தாள்....

ஆனாலும் அவளுக்கு
அவ்வுணவில் விருப்பமில்லை....
அன்பாலே நீ அளித்த
அனைத்து உணவிலுமே
அற்புத உணவென்றால்
அது இந்த அமிழ்தமென்றேன்......
ஆனாலும் அவளுக்கு
அதில் ஏனோ விருப்பு இல்லை...

அருகில் உள்ளவர்கள்
ஆயிரம் சொன்னாலும்
அனைவரும் நாடுவது
அலைவழி தானென்று (google )
அவ்வுணவின் பெருமை பற்றி
அலைபேசி வழியாக
அவளுக்குக் காட்டினேன் ...

ஆச்சரியம்....ஆச்சரியம்...........

நான் உண்ணும் உணவே
அற்புத மருந்தாமாம்...........
புற்று நோய் தடுக்கின்ற
பாக்டீரியா உள்ளதாமாம்..........
அதற்கான காப்புரிமை
அமெரிக்கனிடம் உள்ளதாமாம்....

அதிக விலை வைத்தே
அவன் அங்கே விற்கின்றான்..
அமெரிக்க நாட்டில் வாழும்
ஆண்டர்சனே சொல்லுகின்றான்..........
(MD Anderson cancer cure centre)

ஆனால் நாமிங்கே
அலட்சியமாய் எண்ணுகின்றோம்...
அவளிடம் எடுத்துச்சொல்லி
அமுதத்தை நான் உண்டேன்....
அதையே தரச்சொல்லி
அனுதினமும் கேட்டுக்கொண்டேன்....

அகத்தில் மகிழ்வோடு
அவளும்தான் நகர்ந்துவிட்டாள்....
ஆயினும் எனக்குள்ளே
அமைதி நிலை வரவில்லை

ஆதிகால பொருளுக்கெல்லாம்
அவனுரிமை வாங்குகின்றான்....
அனைத்தையும் இழந்துவிட்டு
அவன்பெருமை பேசுகின்றோம்

எத்தனை கொடுமை இது?
எத்தனை கொடுமை இது?

உங்களில் ஒருவனாக
உரிமையோடு வேண்டுகின்றேன்...
நோய்க்கு அஞ்சி வாழாமல்
பழைய கஞ்சி சாப்பிடுங்கள்

----செ. இராசா---

(ஆற்று நீர் வாதம் போக்கும்,
அருவி நீர் பித்தம் போக்கும்,
சோற்று நீர் இரண்டும் போக்கும்.
----நம் பண்டையத் தமிழ் சித்தர்களின் வாக்கு----)

No comments: