21/05/2017

எதிரியும் இறைவனே!



தடையில்லா பயணமதில் சுவாரசியம் இருப்பதில்லை!
தப்பில்லா முயற்சியிலே அனுபவங்கள் கிடைப்பதில்லை!

மண்ணோடு போராடி விதை முளைத்தால் விருட்சமாகும்!
கல்லோடு போராடி சிலை வடித்தால் சிற்பமாகும்!

எதிரியின் ஏளனங்கள் ஏற்றிவிடும் ஏணியாகும்!
எதிர்ப்பின் வீரியங்கள் வெற்றிக்குப் படியாகும்!

பகைவனை அருள்செய்ய பாரதியும் வேண்டுகின்றான்!
பாய்ந்திடும் புலியினிலும் சக்தியையே காணுகின்றான்!

பலரது உயிர்களிலே படைத்தவனே உறங்குகின்றான்!
சிலரது இதயங்களிலோ சிவமாக விழிக்கின்றான்!

நட்பும் எதிர்ப்பும் குணத்தாலே வளர்ந்திடுமே!
நல்லதும் கெட்டதும் வினையாலே விளைந்திடுமே!

இரட்டைகள் இருப்பதெல்லாம் இயற்கையை புரிந்திடவே!
இயற்கையை
ப் புரிந்துவிட்டால் எதிரியும் இறைவனாவான்!

No comments: