31/05/2017

அறிவே தெய்வம்


      

உயிர்களிலே அமைந்துள்ள அறிவுநிலை அனைத்தையுமே...
உணருகின்ற திறன்கொண்டு ஆறாக வகுத்திடலாம்!
படிப்படியாய் பெற்றுவந்த பரிணாம வளர்ச்சியினால்...
பகுத்தறியும் திறனாலே மனிதநிலை உயர்வாகும்!


ஐம்பொறியின் அறிவின்நிலை ஒவ்வொன்றாய் கூடிடவே...
ஐந்தறிவில் மனம்சேர்ந்து மனிதஇனம் வந்ததென்பர்!
வந்தவழி என்னவென்று சிந்தனையில் தோன்றிவிட்டால்...
நுண்ணறிவுக் கண்களாலே இறையறிவைக் கண்டிடலாம்!

பேரறிவாய் இதயத்திலே இறைவனாக இருந்தாலும்...
சிற்றிவாய் தோன்றிடுமே மாசுள்ள மனதினிலே!
மழைநீரின் நிறம்மாறி மண்நிறத்தைப் பெறுவதுபோல்...
மறைபொருளின் நிஜம்மாறி மனம்போலே தெரிந்திடுமே!

கரைபடிந்த மாசுகளை பயிற்சியாலே நீக்கிவிட்டால்...
களங்கமில்லா மனத்தாலே பேரறிவை விளங்கிடலாம்!
கடலின்ஆழம் அதிகரிக்க அலையின் வேகம் குறைவதுபோல்...
அறிவின்ஆழம் அதிகரிக்க மனதின் களங்கம் விலகிடுமே!

அறிவை விரித்து அன்பை பெருக்கி
அகிலம் முழுவதும் இறையைக் கண்டால்...
அமைதிக் கடலாய் உள்ளம் மாறும்!
அறிவே தெய்வம் என்றே தோன்றும்!



🌎வாழ்க வையகம்🌍
🙌வாழ்க வளமுடன்

No comments: