05/12/2022

சிந்தையெழும் நேரமெல்லாம் சிங்கம் ஆகிறேன்

 


சிந்தையெழும் நேரமெல்லாம்
......சிங்கம் ஆகிறேன்!
விந்தைசெயல் செய்வதற்கே
......வீறு கொள்கிறேன்!!
முந்தையதைத் தாண்டிடவே
......முயன்று பார்க்கிறேன்
பந்தயத்தை வென்றிடவே
......பதுங்கிப் பாய்கிறேன்!
 
நண்பரென்று நம்பிநம்பி
.....நானும் செல்கிறேன்!
உண்மையில்லை என்றதுமே
.....உள்ளம் நோகிறேன்!
சொந்தமென்று பந்தமென்று
.....தோளில் வைக்கிறேன்!
வந்தபின்னே தள்ளிவிட்டால்
.....வாடிப் போகிறேன்!
 
சோகமென்ன சோகமென்று
....சோர்வைப் போக்கியே
தாகமுள்ள காளையைப்போல்
.....தாண்டப் போகிறேன்!
சாகுமுன்னே யாருயென்று
......சான்று காட்டவே
ஆகுமுன்னே சொல்லிடாமல்
...... அன்று சொல்லுவேன்- அதை
.......வென்று சொல்லுவேன்!
 
✍️செ. இராசா

No comments: