18/04/2022

அமைதி பலவீனமா?!

 #தம்பியின் #கேள்விக்கென்_பதில்

அமைதி பலவீனமா?!
ஆச்சரியமாக உள்ளது

பேசுவார் பேசட்டும்
வீசுவார் வீசட்டும்
குத்துவார் குத்தட்டும்
வெட்டுவார் வெட்டட்டுமென
என்ன நடந்தாலும்
எல்லாம் நன்மைக்கேயென்று
அப்படியே அமர்ந்திருந்தால்
அமைதி பலவீனமில்லையா?!
பலவீனம்தான்....

இங்கே
ஏதோ ஒரு சார்பில் பேசுவோன்கூட
தான் யாரென்று காட்டிவிடுகிறான்...
ஆனால்...
எச்சார்பிலும் பேசாதவன்
அருகிருந்தே அறுத்துவிடுகிறான்..
எனில்...
அமைதி பலவீனம்தானே?!

அன்று..
வருணாசிரம தருமத்தால்
வஞ்சிக்கப்பட்டபோதும்;
மகாத்மாவிடம் சென்று
மன்றாடிய போதும்
அம்பேத்காரின் கேள்விகளுக்கெல்லாம்
அமைதியாய் இருந்தோமே...
எனில்;
அமைதி பலவீனம் தானே...

இங்கே...
எத்தனைத் திரௌபதிகள்
துகிலுரியப்படுகிறார்கள்?
அத்தனைத் திரௌபதிகளுக்குமா
அனைவரும் பொங்குகிறார்கள்?!!
எனில்;
அமைதி பலவீனம் தானே...

ஆக...
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...

அமைதி பலம்தான்..
அது சுயத்தை அறியும் பாதையெனில்
ஆனால்...
அமைதி பலவீனமே..
அது சுயநலம் கொண்ட போதையெனில்...

✍️செ. இராசா

No comments: