10/04/2022

மொழிபற்றிய என் பார்வை

 


#மொழி_பற்றிய_என்_பார்வை

பிறமொழி கற்றால் பெரிதாகும் சுற்றம்
மறவாதீர் பைந்தமிழர் மாண்பு
(1)

நம்மொழி யாதென்று நாம்காட்ட வேண்டுமெனில்
பன்மொழியில் மாற்றிப் பகிர்
(2)

இருமொழி மும்மொழி என்பவை தாண்டி
வரும்மொழி எல்லாம் படி
(3)

நம்பெருமை யாதென்று நாமே அளக்காமல்
செம்மொழியை கொண்டுபோய்ச் சேர்
(4)

திணிக்கின்ற போக்கைத் திருத்தாமல் விட்டால்
துணிவுடன் மன்றத்தில் சொல்
(5)

ஹிந்திமொழி கற்றால்தான் இந்திய வேலையெனில்
சிந்தையைச் சீர்திருத்தம் செய்
(6)

அரசியல் தேவைக்காய் ஆர்வலரைத் தூண்டி
அரசியல் செய்தல் பிழை
(7)

ஊடக தர்மமெல்லாம் ஒத்தூதல் என்றானால்
நாடகம்போல் மாறிவிடும் நாடு
(8.)

பேசுவோர் பேசிப் பிழைகளை நீக்கினால்
பேசுவரா எல்லோரும் பேச்சு
(9)

எதுவேண்டும் வேண்டாம் எனும்கொள்கை எல்லாம்
அதுவாழும் மக்களைச் சார்ந்து
(10)

✍️செ. இராசா

No comments: