14/06/2019

#தற்கொலை புரியலாமா?!




காய்த்தது கனியும் முன்னே
காய்களைப் பறிக்கலாமா?!
வாழ்வது கழியும் முன்னே
வாழ்வினை முடிக்கலாமா?

காலணி கடிக்கு தென்றால்
கால்களை வெட்டலாமா?!
காதணி கனக்கு தென்றால்
காதினை அறுக்கலாமா?!

மனத்திலே அழுத்தம் வந்தால்
மண்ணை நீ துறக்கலாமா?
வினையிலே குழப்பம் வந்தால்
விண்ணை நீ விரும்பலாமா?

கற்பனைக் கவிதைக் கெல்லாம்
சொற்களை வதைக்கலாமா?!
மற்றவர் தவறுக் கெல்லாம்
#தற்கொலை புரியலாமா?!

✍️செ. இராசா

(இந்த வாரத்தில் மட்டும் மிகவும் நெருங்கிய உறவுகள் இருவர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். தற்கொலைச் சாவுகள் அதிகரித்துக்கொண்டே வருவதற்கு சமூகத்தில் பரவும் எதிர்மறை எண்ணங்களே மிக முக்கிய காரணம். தற்கொலைச் சாவைத் தடுக்க நிறைய கவுன்சிலிங் தேவைப்படுகிறது.)

No comments: