29/06/2019

புத்தக வெளியீட்டிற்கு வள்ளுவர் வந்திருந்தால்.



(ஒரு வேளை என் புத்தக வெளியீட்டிற்கு வள்ளுவர் வந்திருந்தால்.....அந்த நேரத்தில் வரும் வரிகள் எப்படி இருந்திருக்கும்....ஒரு சின்ன கற்பனை)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

அறத்தோடு பொருளீட்டி
மறத்தோடு இன்பமுற
எழுசீரின் குறளாலே
எழுந்தநின் குரலாலே
ஈரடியால் உலகளந்த
ஈடில்லா நாயகனே...
அணுவிலும் சிறியோன் நான்
அண்டமளவு வணங்குகிறேன்!

இல்வாழ்க்கை இல்லையெனில்
நல்வாழ்க்கை இல்லையென்றும்
துறவுமனம் இல்லையெனில்
பிறவிப்பயன் இல்லையென்றும்
இல்லறத்தைத் துறவறத்தை
இரண்டையும் படைத்தவனே..

நான் எனும் மண்குடத்தை
வான் வரைத் தெரியவைக்க
தாம் இன்று வந்ததெல்லாம்
யாம் செய்த பாக்கியமே...
ஊழ்வினையை என் சொல்வேன்?!
உத்தமனே....வணங்குகின்றேன்!

வெண்பா அறியாதோன்
அன்பால் அழைத்தவுடன்
பண்பாய் வந்தெம்மை
தன்பால் ஈர்த்தவனே...
நன்பா நான் படைக்க
நண்பா நீ உதவு..
என்பா பார் புகழ
உன்பால் சரணடைந்தேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

No comments: