22/06/2017

நான் எனும் மண் குடம்


கடலில் வீழ்ந்த மண் குடங்கள்
கடலின் அடியினில் சென்றனவாம்!

குடத்தின் அகத்து நீரினையே
குடங்கள் தனதாய் நினைத்தனவாம்!

வேறு குடங்களை தாழ்வாக
வெற்று குடங்களாய் இகழ்ந்தனவாம்!

கடலில் வீழ்ந்ததை அவைமறந்து
கடலை வெளியே தேடியதாம்!

பெரிய திமிங்கலம் அங்குவர
பொடியாய் போனதாம் மண்குடங்கள்!

மட்கலம் போலவே மனிதர்களும்
மறந்தனர் கடலெனும் கடவுளையே!

மட்கலம் என்னும் 'நான்' உடைந்தால்
மனிதனும் கடவுளும் ஒன்றாகும்!

No comments: