22/08/2022

ஔவைத் திங்கள் - 005 -------------- இனம் இனத்தோடு சேரும்

 


சோம்பேறி கூட்டத்தில் தூங்குவதைத் தப்பென்றால்
வேம்பென்பர் வேண்டாம் விடு!
(1)
 
புகழென்னும் போதைக்குப் போட்டுவிடும் குல்லா
இகழாகும் வேண்டாம் இழுக்கு!
(2)
 
தமிழின் பெயரால் தவறிழைப்போர் கண்டால்
தமிழறம் பாடித் தடு
(3)
 
இலக்கியப் பேர்சொல்லி ஏமாற்றும் கூட்டம்
வலைவீச வந்தால் நறுக்கு!!
(4)
 
மொய்வைத்தால் மொய்வைக்கும் மொய்நட்பை விட்டுவிட்டு
மெய்நட்பைப் பற்றினால் நன்று!
(5)
 
ஒத்தூதும் கூட்டத்தில் ஊதுகுழல் ஆகவுள்ள
சத்தில்லா வீணரைத் தள்ளு!
(6)
 
அறிவீனர் கூட்டத்தை ஆதரிப்போர் கூட
அறிவீனர் என்றே அறி
(7)
 
படைப்பைத் திருடி படைப்புபோல் செய்வோர்
கடைசியில் என்னாவர்? காண்!
(8)
 
வெளிச்சத்தை தேடிவிழும் விட்டில்போல் ஆகா
ஒளிதேடும் ஞான உயிர்!
(9)
 
குடிக்கக் கரம்பற்றிக் கோப்பையைத் தூக்கி
இடித்துரைக்கும் நட்புதான் இன்று!
(10)
 
 
 
(தமிழை வைத்துப் பிழைப்பவர்களை நினைத்து எழுதிய பாடல்)
#மெட்டு: எல்லாம் தெரிந்த மெட்டுதான். கண்டுபிடியுங்கள்....
 
நாயோடு தான் நான் பாடுவேன்
நரியோடு தான் நான் கூடுவேன்
விருதோடுதான் விளையாடுவேன்; உன்
மடி மீதுதான் நான் தேடுவேன்‌...(2)
 
நாயோடு தான் நான் பாடுவேன்
தளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளைதான்
நீ மறுத்தாலும் அது காண
பேர் ஆர்வம்தான்....(2)
 
உனைத்தூக்கும் துணையாக
எனை மாற்றவா
எனைத்தூக்கும் துணையாக
உனை மாற்றிவா
தமிழ் விளக்காக நாம் வாழ
வழி செய்யவா......
 
(நாயோடு)
 
பாலூற்ற எம காலம்
அழைக்கின்றது
நான் படும்பாட்டை சம காலம்
மறுக்கின்றது....(2)
 
எமக்காக எந்நெஞ்சம் துடிக்கின்றது?
எமக்காக எந்நெஞ்சம் துடிக்கின்றது?
சில பேர் தந்து
என் வாழ்க்கை இனிக்கின்றது...
 
(நாயோடு)
 
✍️செ. இராசா

No comments: