15/08/2022

பொய்முகம் --- ஔவைத் திங்கள்- 004

தலைப்பு : #பொய்முகம்
(வெண்பா எண்: 1)
 
விரகர் இருவர்
.......புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள்
.......வேண்டும் – அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும்
.......வேண்டும் அவர்வித்தை
நஞ்சேனும் வேம்பேனும்
.......நன்று?


மேடையில் போற்றிடுவார்! விட்டதும் மாற்றிடுவார்!
சாடையில் கூப்பிடுவார் தாழ்ந்து!
(1)

வாக்காளர் தெய்வமென்பார்! வந்தவுடன் என்னவென்பார்?
நாக்கால் வடைசுடுவார் நன்கு!
(2)

காணும்முன் சீயென்பார்! கண்டவுடன் பல்லிழிப்பார்!
நாணும் செயல்புரிவார் நைந்து!
(3)

பாரதி நீயென்பார்! பார்த்துவிட்டு போவென்பார்!
கோருவதைத் தாவென்பார் கோர்த்து!
(4)

நிர்வாகத் தூணென்பார்! வேண்டிநின்றால் வீணென்பார்!
கர்ஜித்தால் போவென்பார் காண்!
(5)

அண்ணனென்பார் தம்பியென்பார்! ஐயமில்லா சாமியென்பார்!
எண்ணத்துள் கொண்டிடுவார் சூது!
(6)

கர்ணனினி இல்லையென்பார்! காரணம் நீயென்பார்!
நிர்மூலம் ஆக்கிடுவார் நின்று!
(7)

சீதைபோல் நீயென்பார்! சீக்கிரமாய்ச் சொல்லென்பார்!
தோதையெண்ணி விட்டிடுவார் தூது!
(8)

சாமியே தானென்பார்! சாய்ங்காலம் வாவென்பார்!
காமினிக்காய் வாடிடுவார் காய்ந்து!
(9)

கண்ணகிபோல் வாழென்பார்! காதலிப்பார் மாதவியை!
பெண்ணென்றால் கொண்டிடுவார் பித்து!
(10)

✍️செ. இராசா

No comments: