12/07/2022

கவிதை என்பது எது?

 






எம் உறவினர் ஒருவரின் வீட்டில் சில மணித்துளிகள் தங்க நேர்ந்தபோது, வழக்கம்போல் ஏதாவது படிக்கக் கிடக்கிறதா என்று தேடினேன். எனக்கு பதினொன்றாம் வகுப்புத் தமிழ்நூல் கிடைத்தது. முதல்ப்பாடமே கவிதை பற்றியதாக இருந்தவுடன் மனம் சந்தோசத்தில் துள்ளியது. கட்டுரை இப்படித்தான் ஆரம்பமானது; 
 
"கவிதை என்பது எது? கவிதை எழுதும் செயல்பாடு எப்படி நிகழ்கிறது? கவிதை எழுதுகிற போது எழுதி கொண்டிருப்பவனுக்குள் என்ன நிகழ்கிறது? கவிதை எழுதி முடித்து விட்ட பிறகு கவிஞனுக்கும் கவிதைக்கும் என்ன உறவு? அதை யார் முடிவு செய்கிறார்கள்?"
 
இப்படியெல்லாம் இருந்தவுடன் ஆகா வென்ற மனமகிழ்வோடு கட்டுரையைப் படித்தால் ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், இக்கட்டுரையின் ஆசிரியர், எழுத்துமொழி பேச்சுமொழி என்று ஏதேதோ கூறி, கவிதை மரபான செய்யுள் சந்தத்திலிருந்து விடுதலை அடைய வேண்டுமென்றும், கவிதைக்கென இருக்கிற தனித்துவமான மொழிநடையில் இருந்தும் விடுதலையடைய வேண்டுமென எதையோ கூற முற்படுகிறார். கவிதைக்கு அடையாளமாய் வால்ட் விட்மன், ஸ்டெபான் மல்லாரமே, பாப்லோ நெரூடா....என தனக்குத் தெரிந்த ஆங்கிலப் பெயர்களையெல்லாம் அடுக்கி புரூடா விடுகிறார். பாவம் இவருக்கு பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற பெயரெல்லாம் தெரியாதுபோலும். மேலும் தான் கட்டுரையின் ஆரம்பித்த கேள்விகளுக்கான விடையைக் கடைசிவரை கூறவே இல்லை.
 
சரி இவர் யாரென்று குறிப்பைப் பார்த்தால், இவர் ஒரு கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஒவியர் என்று வருகிறது. ஒரிய மொழி நூலை மொழிபெயர்த்ததால் சாகித்திய அகாடமி விருது வாங்கியவராம். இவர் எந்தக் கட்சிக்காரருக்குச் சொந்தக்காரரோ தெரியவில்லை. 
 
சத்தியமாக சொல்கின்றேன். நீங்கள் வேண்டுமானால் படித்துப்பாருங்கள். உங்களுக்கேப் புரியும். அதாவது இது எதுவுமே புரியாதென்பது புரியும். கொடுமை இறைவா..இப்படி இருந்தால் தமிழ் எப்படிங்க வாழும்? பாவம் மாணவர்கள்....நாமும்தான்.
 
✍️செ. இராசா

No comments: