18/07/2022

மோதிரம்

 



ஆடம்பர அணிகலனாய்;
ஆட்சியாளர்களின் முத்திரையாய்;
இருமன ஒப்பந்தமாய்;
திருமணச் சின்னமாய்;
அழகியல் ஆபரணமாய்;
அவரவர் நம்பிக்கையாய்;
நான்காம் விரலேறும் மோதிரங்கள்
ஏன் நான்காம் விரலேறுகிறது தெரியுமா?!
 
ஆம்....
அங்கேதான் இதய நரம்புள்ளதாம்
ஆராய்ச்சி சொல்கிறது...
ஓ‌..
அதனால்தான் இராமனே அனுமனிடம்
சீதையிடம் காண்பிக்க வேண்டி
மோதிரம் கொடுத்தானோ?!
 
அவ்வளவு ஏன்?
எகிப்திய கல்லறை முதல்
எல்லாக் கல்லறைகளிலும்
ஏராளமாய்க் கிட்டியதும்
இந்த மோதிரங்கள் தானாம்...
 
விரகர் இருவர் புகழ்ந்திட
விரல்நிறைய மோதிரத்தோடு சென்றால்
உரைப்போரின் கவியை நன்றென்பராம்
உலகியல் கூறும் ஔவையின் உரையிது...
 
உண்மையோ? பொய்யோ?
எல்லா மதத்தினரும்
ஏற்றுக்கொண்ட அணிகலனென்றால்
இந்த மோதிரம் மட்டுமே...
 
அதுமட்டுமா?
"குட்டு பட்டாலும்
மோதிரக்கையால் குட்டுப்படவாம்"
தகுதியைத் தீர்மானிக்கும் பழமொழி இது
எனில்....
எத்தனை தகுதி வாய்ந்தது இந்த மோதிரம்.
 
உண்மைதான்....
இருப்பவன் வெள்ளி மோதிரம் போட்டாலும்
பிளாட்டினமா என்னும் உலகு
இல்லாதவன் பிளாட்டினமே போட்டாலும்
அதை ஏற்கவாப் போகிறது?
 
இங்கே
மோதிரங்கள் வெறும் ஆபரணங்கள் அல்ல..
பல சமயங்களில்
தன்னையே அடமானமாக்கி; நம்
தன்மானம் காக்கும் நண்பர்கள்...
 
எனில்,
அணியுங்கள் மோதிரம்
ஆபரணமாய் இருக்கும்
ஆபத்திலும் உதவும்..
 
✍️செ. இராசா

No comments: