25/07/2022

அம்மா

 



தாயைப்போல பிள்ளை இருக்கும்
நூலைப்போல சேலை இருக்கும்
சொன்னாங்க பெரியவுங்க நேத்து....
 
அன்னைபோல அன்பிருக்கும்
உன்னைபோல உலகிருக்கும்
எல்லார்க்கும் சொல்லுங்க இதையும் சேர்த்து- நீங்க
எல்லார்க்கும் சொல்லுங்க இதையும் சேர்த்து
 
எங்கெங்கோ கோவிலிருக்கு
எத்தனையோ சாமியிருக்கு
பெத்தசாமி எங்கயிருக்கு சொல்லு?- நீயும்
மத்தசாமி எல்லாத்தையும் தள்ளு- அந்த
ஒத்தசாமி முன்னாடிப்போய் நில்லு!
 
தூக்குச் சட்டியில என்ன இருக்கோ கட்டிவிட்டு
விடியக் காலையில எங்களை எல்லாம் அனுப்பிவப்பா...
கூரை வீட்டுக்குள்ள மிஞ்சிப்போனா என்ன இருக்கும்
எங்களைப் படிக்கவக்க தன்னுசுரைத் தந்துநிப்பா...
கூப்பிட்ட குரலுக்கங்கே ஓடி வருவா
கூப்பிட்ட குரலுக்கங்கே ஓடி வருவா
சாப்பிட நினைக்குமுன்னே சோறு தருவா...
 
ஒக்கூர் சந்தையில என்ன இருக்கோ வாங்கிக்கிட்டு
மருத வண்டியில கருக்கலிலே வந்திடுவா
ஊத்து தண்ணியெடுக்க கொள்ளதூரம் போயிவந்து...
எங்களை வளர்த்தெடுக்க என்னென்னமோ செஞ்சுதருவா..
கோட்டைக் கருப்பன்போல ஓடி வருவா
கோட்டைக் கருப்பன்போல ஓடி வருவா
சாட்டை இல்லாமலே நல்லாத் தருவா....

 
✍️செ. இராசா

No comments: