23/07/2022

இரு விமான நிலையங்கள்

 


 
போகும்போதும் வரும்போதும் நல்ல முறையில் வரவேற்பும் வாழ்த்துகளும் வழங்கிய அனைவருக்கும் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் எல்லை விரிந்துகொண்டே போவதில்தான் எத்தனை மகிழ்ச்சி என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன் உறவுகளே...நன்றி நன்றி!
 
இலங்கையில் இத்தனை பிரச்சினைகள் நடக்கிறதே அவர்களின் விமான சேவை எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்குமே தற்சமயம் உள்ளது. ஆனால், பாருங்கள் எந்த மாற்றமும் இல்லாமல், மிகச் சிறப்பான முறையில் கவனிக்கின்றார்கள். சாப்பாடு, தேநீர், குளம்பி மற்றும் இதர பானங்கள் வரை எந்தக் குறைபாடும் இல்லாமல் விமானமும் விமான நிலையமும் வழக்கம்போலவே வெகு சிறப்பாகச் செயல்படுகிறது. கழிப்பறையும் தூய்மையாக உள்ளது. ஒரு நாடே கொந்தளிக்கும் போதும், தலைவர்கள் ஸ்திரத்தன்மை இல்லாதபோதும், அங்குள்ள ஊழியர்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது. ஆக...ஒரு நாட்டில் தலைவரே இல்லாதபோதும், கட்டமைப்பு சரியாக இருந்தால் மற்றவை தானாக நடக்கும் என்பதற்கு இலங்கை ஓர் சாட்சியாய் உள்ளது.
 
உலகக்கோப்பை 2022 நடக்க இருப்பதால், கத்தாரின் விமான நிலைய சேவைகள் வியக்க வைக்கும் அளவில் உள்ளது. கத்தார் அடையாள அட்டை உள்ளவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம். தானியங்கி சேவைக்கு சென்று பாஸ்போர்டை (கடவுச்சீட்டு) அதில் வைத்தால் போதும், ஒரு கதவு தானாக திறக்கும், அடுத்து முகத்தைப் படம்பிடித்துக் கொண்டபின், அடுத்த கதவு திறக்கும். வேறு யாருமே இருக்க மாட்டார்கள். அடுத்து நமக்கான பெட்டி வரும் நகர்வு மேடைக்குச் சென்றால், அதி விரைவில் வருவதுபோல் அமைத்துள்ளார்கள். அங்கே இருவர் பெட்டிகளை சரியாக அடுக்க நியமித்துள்ளார்கள். அடுத்து பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றால், கதவைக் கடக்கும்போது சப்தம் வரும் சமிக்ஞை வந்தால் மட்டுமே பரிசோதனை. இல்லையேல் போய்க்கொண்டே இருக்கலாம். ப்பா...செம்மல்ல. அதாவது, நீங்க ஒரு நாட்டிற்குள் நுழைகின்றீர்கள், அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களை யாருமே எதுவுமே கேட்பதில்லையென்றால், எப்படி இருக்கும். நவீன விஞ்ஞான உலகத்தில் அனைத்தையும் சாத்தியமாக்கும் கத்தார் விமான நிலைய சேவை உண்மையிலேயே வியக்க வைக்கிறது உறவுகளே...
 
✍️செ. இராசா

No comments: