10/04/2020

உம்காதில் கேட்கவில்லையோ-



ஊரெங்கும் உலகெங்கும் ஒலிக்கின்ற ஓலங்கள்
உம்காதில் கேட்கவில்லையோ- இறைவா
உம்காதில் கேட்கவில்லையோ?
பாரெங்கும் ஊடுருவிப் பலபேரை மாய்த்தாலும்
பாரம்தான் குறையவில்லையோ- புவியின்
பாரம்தான் குறையவில்லையோ?

காலங்கள் நேரங்கள் கண்ணீரில் சென்றாலும்
காட்சிகளில் மாற்றமில்லையோ? - இந்தக்
காட்சிகளில் மாற்றமில்லையோ?
ஞாலத்தின் சாபங்கள் ஞாயிறுபோல் சுட்டாலும்
ஞானத்தில் ஏறவில்லையோ?- எங்கள்
ஞானத்தில் ஏறவில்லையோ?

அப்பப்பா அப்பப்பா ஆட்டங்கள் போதும்பா
அப்பாநீ ஓடிவாப்பா- எங்கள்
அப்பாநீ ஓடிவாப்பா!
தப்பப்பா தப்பப்பா தப்புகளாய்ச் செய்தோம்பா
தண்டனைகள் போதுமப்பா- எமக்குத்
தண்டனைகள் போதுமப்பா!

✍️ செ. இராசா

No comments: