09/04/2020

சரியாமல் தலைநிமிர்வோம் மீண்டும்!

அகலக் குழி வெட்டி
அதிலாற்று மணல் கொட்டி
கருங்கல்லை மேலடுக்கி
பெருந்தச்சன் கட்டியதன்
சரியான தொழில்நுட்பம் வேண்டும்- வந்தால்
சரியாமல் தலைநிமிர்வோம் மீண்டும்!

நீரலையில் நிற்குங்கால்
நிலத்தடியில் போவதினை
நினைவலையில் கொண்டதினால்
அணைபோடத் திட்டமிட்டக்
கரிகாலன் மதிநுட்பம் வேண்டும்- வந்தால்
சரியாமல் தலைநிமிர்வோம் மீண்டும்!

உணவே மருந்தென்று
உலகெலாம் பறைசாற்றி
சித்த மருத்துவத்தில்
வித்தகங்கள் செய்துதரும்
தமிழ்ஞானப் பொதுமருந்து வேண்டும்- வந்தால்
தனியாகத் தலைநிமிர்வோம் மீண்டும்!

✍️செ. இராசா

No comments: