29/01/2019

நான் யார்?!!- அனுபவம்


2001 மே மாதம், பொறியியல் பரீட்சை எழுதி ஓரு பத்து நாட்களுக்குள்ளாகவே என் தந்தை எங்கள் ஊரிலேயே ஒரு பொறியாளரிடம் சேர்த்து விட்டார்கள்.
நான் கட்டிடவியல் மற்றும் கட்டுமானவியல் படித்து, அதை எப்படி உண்மையில் களத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க நினைத்தால் எனக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. உதாரணத்திற்கு....படிக்கும் போது மீட்டர், சென்டி மீட்டர்...,களத்திலோ அடி, இஞ்சு, நூலு,..... இப்படி நிறைய.....ஒரே குழப்பமாக, இவற்றையெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளவே நாட்களாகிவிட்டது.

எப்படியாவது சென்னை போய் வேலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியில் ஆறே மாதத்தில், வேலையை உதறிவிட்டு மிகவும் புகழ் பெற்ற CR ராஜு என்ற ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் அப்பா தயவில் எங்கள் குடும்ப வழிகாட்டி திரு VKN கண்ணப்ப செட்டியார் உதவியில்.
(இவரிடம் எங்கள் ஐயா 48 வருடங்கள் மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்துள்ளார்கள். நட்புக்காக படத்தில் வரும் பாத்திரங்கள்போல இருவரும் இரு(ற)ந்தார்கள். என் அப்பா ஒரு 7 வருடங்கள் அவர் மகனிடம் வேலை பார்த்தார்கள். அனைத்து முடிவிலும் இவர்தான் முன்னிலை வகிப்பார்)

உண்மையில் சென்னை, அன்று முதல் இன்று வரை அனைவரையும் ஏன் பிரம்மிக்க வைக்கிறது என்பதை நான் அங்கு கண்டேன். மிகவும் பரபரப்பான வாழ்க்கை. என்னால் மறக்க முடியாதது சென்னையின் நெரிசலில் போகும் அந்த ரயில் பயணங்கள். என்னதான் உடைகளைத் தேய்த்து அழகாக உடுத்தி ரெயிலில் ஏறினாலும் ஐந்தே நிமிடத்தில் கசக்கிப் பிழிந்து துப்பிவிடுவார்கள். அட அதிலும் ஒரு சுகம் இருக்குங்க... எப்படி என்றா கேட்கிறீர்கள்?!! மாதாந்திர பயணச் சீட்டு எடுத்துக்கொண்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு சிறப்பு உண்டு. கிண்டியில்- குஷ்பூ இட்லி/உப்புமா, மவுண்டில்- 1 ரூ ஐஸ் கிரீம், சைதையில்- இரத்தப் பொறியல், மாம்பழத்தில்- கடைவீதியில் நடை.....அப்புறம் அழகான கானா பாட்டு தினமும் கேட்கலாம்.....etc. etc. இப்படி போய்க்கொண்டே இருக்கும்.

அதில் முக்கியமானது, என் வாழ்க்கையை மாற்றிய ஒரு சிறு புத்தகம், “நான் யார்?” என்ற தலைப்பில் என் பெரியம்மா வீட்டில் பார்த்தேன். அதுதாங்க என் ஆன்மீகப் பயணத்திற்கு முதல் தீனி போட்ட புத்தகம். சிறு வயதில் நான் தேடிய கேள்விக்கு சரியான விடை அதில் இருந்தது. அதன் வெளியீடு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் என்றிருந்தது. அங்கே வாரா வாரம் தொடர்ந்து போனேன். பக்தியும் ஞானமும் இணைந்தே கிடைத்தது. அனைத்து மதங்களும் போகும் பாதை ஒன்றே என்ற சர்வமத சங்கமத்தின் ஒரு புள்ளியை அல்ல சமுத்திரத்தைக் கண்டேன். பின்னாளில் கல்கத்தா, கவுகாத்தி என்று எங்கு சென்றாலும் அந்த மடங்கள் சென்றேன். அனைத்து மதங்களும் சொல்வது ஒன்றே என்பதைப் புரிந்து கொண்டதால், கத்தார் சர்ச்சில் இரண்டு வருடங்கள் ஒரு பாடகராகவும் இருந்தேன். மசூதி சென்று வந்தேன்.....இப்படி எல்லாம் சென்ற வாழ்க்கை, பிரம்மா குமாரி ராஜயோகம் வழியாக அறிவுத்திருக்கோவில் கண்ட வேதாந்த மகரிஷியின் மனவளக்கலையில் நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் அந்த “நான் யார்?” என்ற புத்தகமே.
இப்பொழுதுகூட எப்போது சென்னை சென்றாலும் மயிலாப்பூர் போய் குட்டிக்குட்டி புத்தகங்கள் வாங்கி வருவேன். அறிவுக்கண்ணை ஆழமாகத் திறக்கும் இடம் என்பதற்கு இங்கே வைத்துள்ள புத்தகங்களே சாட்சி...
#மதங்கள்_என்பது_பாதைகள்_இலக்குகள்_அல்ல
#Sri_Ramakrishna_Math
#Chennai_experience
✍️செ. இராசா

No comments: