02/02/2018

இந்த உலகப்பூ



“காதல் ஜோடி தற்கொலை”

தினத்தந்தி நாளிதழில்
திகைப்பூட்டும் செய்தி கண்டேன்.

அறிந்தும் அறியாத
அரும்பு மீசை பருவத்திலே
அன்று கண்ட செய்தியினை
அடிஅடியாய் வாசித்தேன்...
...........
குற்றால அருவியிலே
குதூகலம் நடத்திவிட்டு,
மண்ணுலகுக் காதலை
விண்ணுலகில் தொடர்வதற்காய்,
காதல் பறவைகள்
காலனிடம் சென்ற சேதி
புரிந்தும் புரியாமல்
வரிவரியாய் வாசித்தேன்...
........

இறந்தோர் அறையினிலே
இருந்த காகிதத்தில்
காதலன் எழுதி வைத்த
கவிதை வரிகளையும்
காலை நாளிதழில்
வரி வரியாய் வாசித்தேன்....

அடிமனதின் பதிவுகளாய்
ஆழமாய் பதித்துவைத்த
மன நூலின் வரிகளைநான்
முக நூலில் எழுதுகின்றேன்....

இதோ;

“இந்த உலகப்பூ
ஒரு நாள் வெடித்துச் சிதறத்தான் போகிறது....
சிதறிய பூக்களில்
சிவந்த பூ ஒன்று
உன் காலடியில் விழுமேயானால்
அது என் இதயப்பூவாய்தான் இருக்கும்”

என்னை உறையவைத்து
எனக்குள் எழுச்சி தந்த
இறந்த காதலரின்
இறக்காத கவிதையினை
இங்கே உங்களுக்கு
இயன்றவரை எழுதிவிட்டேன்.

நன்றி

No comments: