07/09/2017

எத்தனை எத்தனை மனிதர்கள்?!


எத்தனை எத்தனை மனிதர்கள்-இங்கே
எத்தனை குணங்களில் இருக்கின்றார்?!
எப்படி இப்படி இருக்கின்றார்- என்றே
எப்பவும் எவரும் வியக்கின்றார்?!

செல்வம் குறைந்த மனிதர்களில்- பலர்
சிறப்புடன் மகிழ்வுடன் வாழ்கின்றார்!
செல்வம் நிறைந்த மனிதர்களில்- பலர்
சிந்தையில் வறுமையில் உழல்கின்றார்!

பிறவி குணத்தை மேம்படுத்தி- பலர்
பிறர்நலம் காத்திட முயல்கின்றார்!
பிறவி குணத்தை பாழாக்கி- பலர்
படுகுழி அடியினில் வீழ்கின்றார்!

கடவுளை மனிதனில் காணாமல்- பலர்
கடவுளைக் கற்களில் தேடுகின்றார்!
இறைநிலை யாதெனப் புரியாமல்- பலர்
இறைவனை எங்கோ தேடுகின்றார்!

பணம்பணம் என்றே நாள்தோறும்-பலர்
பணங்களை தேடியே ஓடுகின்றார்!
கணங்களை இனிதாய் மாற்றாமல்- பலர்
குணங்களில் பிணம்போல் நாறுகின்றார்!

-----செ. இராசா----

No comments: