11/09/2022

சாதிவிட்டு சாதி -மகாகவி பாரதிக்கு இந்த வெண்பா உரையாடல்களை சமர்ப்பிக்கிறேன்

 


(எத்தனையோ எதிர்ப்புகளை மீறி சாதிவிட்டு சாதி திருமணம் நடந்த குடும்பத்தில், அந்த வீட்டுத் தலைவரை சம்மதிக்க வைக்கக் காரணமாக இருந்த மகாகவி பாரதிக்கு இந்த வெண்பா உரையாடல்களை சமர்ப்பிக்கிறேன்)

 
யாரென்ன சொன்னாலும்
.....ஏற்கமனம் தோன்றவில்லை
ஊரென்ன சொல்லுமோ?!
.....ஓர்கணம்- பாரென்னை
சாதிவிட்டு சாதியெனில்
.....தன்மானம் என்னாகும்?
நாதியற்று போகனுமா
.....நாம்?
 
 
என்னப்பா சொல்கின்றீர்?
.....இவ்வூரார் யாரப்பா?
என்:அப்பா நல்லப்பா
.....என்றெல்லாம்- சொன்னேன்பா
சித்தப்பா மாமாவாய்
.....செப்பியதும் பொய்யாப்பா
இத்தனைநாள் சொல்லலைப்பா
.....ஏன்?
 
 
பாரதியார் பற்றியெல்லாம்
.....பாடம் புகட்டிவிட்டு
பாரதி- யார்? என்பதுபோல்
......பண்ணாதீர்- பூரணமாய்
கட்டிக் கொடுத்திடுங்கள்
.....கைகாட்டும் பிள்ளையினை
விட்டுக் கொடுத்திடுங்கள்
.....வீம்பு!
 
 
உண்மை உணர்ந்தாலும்
.....உள்ளத்துள் போராட்டம்
கண்கள் திறந்தாலும்
.....காணாத- திண்டாட்டம்
மாறியது பாரதியால்
.....நான்பார்த்த கண்ணோட்டம்
மீறிடலாம் பொய்வர்ணம்
....விட்டு!
 
 
பிள்ளைக்காய் வாழ்வதாய்
.....பேசுகின்ற பெற்றோரும்
பிள்ளைசொல் கேளாமல்
......பிற்போக்கைப் - பற்றுகையில்
முற்போக்காய் வாழ்கின்ற
.....மூத்தகுடி என்பதுபோல்
நிற்கின்றீர் அப்பா
.....நினைந்து!
 
✍️செ. இராசா

No comments: