05/09/2022

ஔவைத் திங்கள் 007 சாதிகள் இரண்டு

 

சாதிகள் இல்லையென்று சத்தியம் செய்துவிட்டு
சாதிபார்த்தே ஊதிடுவர் சங்கு.
(1)
 
வர்ணங்கள் தப்பென்று வக்கணையாய்ப் பேசிவிட்டு
வர்ணக் கொடிபிடிப்பர் வந்து.
(2)
 
சாதிக் கொடுமையென்று சார்ந்தமதம் விட்டபின்னர்
சாதிச் சலுகையேன் சொல்?
(3)
 
காசுபணம் உள்ளதெனில் கண்டுகொள்ளார் சாதியினைப்
பேசுபொருள் ஆக்குகிறார் பின்பு!
(4)
 
சாதியை வேரறுத்த சாட்சியாம் என்பவரும்
சாதிக்கேத் தந்திடுவார் சீட்டு!
(5)
 
தப்பொன்று செய்துவிட்டு தண்டனைக்குத் தப்பிடவா
செப்புகிறார் ஓரினமாய்ச் சேர்ந்து?
(6)
 
பிரிவினை மூலம் பிரித்தாளும் கூட்டம்
தெரிந்தே செய்யும் வினை!
(7)
 
இனமத பேதமெனும் எல்லாமும் தாண்டி
இணக்கமாய் வாழ்ந்தால் இனிது!
(8)
 
தருபவர் மேலோர் தராதவர் கீழோர்
இருசாதி தானென்பார் இங்கு!
(9)
 
இருப்போர் இருப்பில்லார் என்பதைக் கொண்டே
இருசாதி என்றுரைப்போம் யாம்!
(10)
 
✍️செ. இராசா



No comments: