18/09/2022

நானும் எமனும்

 


 
என்னப் பிறப்பிதுவோ?
.....என்னப் பொழப்பிதுவோ?
ஒன்னும் புரியாமல்
.....ஓய்ந்திடுமோ- என்னுசுரும்
ஏன்யா எமதர்மா....
.....எங்கிருக்க சொல்லய்யா
நான்யார் உரைத்திடய்யா
.....நன்று?
 
 
ஏன்யா இராசய்யா..
.....என்னய்யா கூப்பிட்ட
நான்யார்னு கேட்கும்முன்
......நான்யார்னு- தோன்றலையா?
நீயார்னு நான்சொல்ல
.....நேராநான் வந்தேன்னா
நீயாவ தென்ன
......நினை?!
 
 
அழிக்கும் கடவுளின்
......அக்மார்க் உருவே
விழியால் எரிக்கும்
......விதியின்- கழிவே
எருமையில் சுற்றும்
.....எமதர்ம நட்பே
விரும்பியே வைத்தேன்
.....வினா!
 
 
உயிர்க்கவலை இல்லா
......உறவே‌... இராசா...
உயிரைப் பிணைந்த
......உடலில்- உயிரைத்
தனியாய் பிரித்தால்
......தரும்பெயர் என்ன?
உனதுயிர் எங்கே?
......உணர்!
 
 
பிணமென மாற்றிப்
.....பிரிக்கும் எமனே
உணர்வென ஏற்றி
.....உயிர்க்கும்- கணமே
மனதினை விட்டு
....மறந்திடல் ஏனோ?
மனதிற்குள் தானா
......வுயிர்?
 
 
மறைபொருள் தத்துவமாம்
....."நான்யார்?" அறிவாய்
மறையும் வரைக்கும்
.....மகிழ்வால்- நிறைவாய்
உறைபொருள் தானென
.....உற்றுணர்ந் தாலே
இறைபொருள் தோன்றும்
.....இனிது!
 
 
உண்ட மயக்கம்
....உறங்கிவிட்டேன் பாரய்யா...
கண்ட கனாகண்டு
....கண்திறந்து- கொண்டேன்யா.
ஆனாலும் ஓர்கேள்வி
.....அப்புறமா சொல்லேன்யா
ஆணாக ஏன்பிறந்தேன்
.....அன்று?
 
✍️செ. இராசா

No comments: