06/12/2020

மூச்சுவிடாமல் பேசுகிறாரென

மூச்சுவிடாமல் பேசுகிறாரென
மூத்தோரைச் சொல்லாதீர்!
மூச்சே பேச்சானோர்
பேச்சின்றிப்போனால்
மூச்சின்றி போனதாய்
மூர்ச்சையாகமாட்டாரா?

ஆமாம்....
பேச்சின் வீச்சு தெரியாதா உங்களுக்கு?

அன்றைய அண்ணாத்துரை முதல்
இன்றைய அண்ணாத்த வரை
உலகையே உலுக்கிய ஹிட்லர் முதல்
உள்ளூரை உசுப்புகிற சுடலை வரை
இங்கே அனைவரின் ஆயுதமும்
அவரவர் பேச்சுதானே?

அட...
பேசும் சிலரையும்
பேசாமல் வைக்க
பேசிப்பேசியே மகுடி ஊதும்
மோடி வித்தை தெரியாதா உங்களுக்கு?!

நீயும் சாதியெனச் சொல்லாமல்
நீயுமென் சாதியெனச் சொல்லும்
சாதீயத்தலைவலிகள் தெரியாதா உங்களுக்கு?!

சுகி‌.சிவம்போல்
பாரதி பாஸ்கர் போல்
இலங்கை ஜெயராஜ்போல்
நெல்லைக் கண்ணன்போல்
நல்ல பேச்சாளர்களும்
இல்லாமல் இல்லை...

சுக்கிரீவனின் நியாயத்தை இராமனுக்கும்
இராமனின் சோகத்தை சீதைக்கும்
சொல்லும் விதத்தில் சொல்லி
சொல்லின் செல்வனானானே அனுமன்
அவன்போலவும்

துக்கிக்கத் தகாத துரியோதனரை
தூக்கத் தயங்கிய பார்த்தனை
கீதைசொல்லிப் பாதைமாற்றினானே பரந்தாமன்
அவனைப் போலவும்
இன்னும் நல்ல பேச்சாளர்கள்
இல்லாமல் இல்லை!

ஆத்திகன் நாத்திகனாவதும்
நாத்திகன் ஆத்திகனாவதும்
மனிதன் மதம்பிடிப்பதும்
மதம்பிடித்தோன் மதம் மாறுவதும்
கட்சிக்காரன் ஆள்பிடிப்பதும்
கார்ப்பரேட் காரன் பொருள் விற்பதும்
இங்கு எல்லாமே பேச்சால்தானே?!

ஆமாம்...
உங்களைப்பற்றிக் கேட்கையில்
உம்மென்று இருந்துவிட்டால்
யார் தருவர் வேலை?!

ஆக‌...
பேசு
பேசும் நேரத்தில் பேசு...
இல்லையேல்...
ஊர் இப்படிப்பேசும்
"என்ன பேச்சு மூச்சே இல்லையென்று"

இனியும்..
மூச்சுவிடாமல் பேசுகிறாரென......
(முதலில் இருந்து)

✍️செ.இராசா

No comments: