30/12/2020

தென்னைப்பத்து............. குறள் வெண்பாக்கள்

 



#தென்னைப்பத்து
#குறள்_வெண்பாக்கள்

காயென்றும் ஓர்நாள் கனியாகும் ஆகாதே
மாயக்காய் தேங்காய் அது
(1)

உப்புக் கடல்நீரை உள்வாங்கிக் கொண்டாலும்
உப்பில்லை அந்நீரில் பார்
(2)

பல்லடுக்குப் பாதுகாப்பில் பத்திரமாய் நீர்வைத்த
வல்லமையை என்சொல்வேன் நான்
(3)

மின்சாரம் இல்லாமல் நீரேற்றி மாற்றுகின்ற
நன்னீர்செய் ஞானம் நவில்
(4)

ஓரிடம் காலூண்றி ஓங்கி வளர்வதை
யாரிடம் கற்றாயோ நீ
(5)

ஆழக்குழி தோண்டி அடியிலே நீர்விட்டால்
வாழவழி காட்டுவாய் நீ
(6)

நேராய் நிமிர்ந்தோர்க்கு நேர்கின்ற தீங்கைப்போல்
பாரேன் தடுக்கிறார் 'கள்'
(7)

தென்னங்கள் என்றவுடன் தீங்கெனச் சொல்வோரின்
எண்ணங்கள் சாராயங் கள்
(8)

இளநீரின் இன்சுவைபோல் ஈடேதும் உண்டோ?
உளமாற வந்திங்(கு) உரை
(9)

நீர்விட்டால் நீர்செய்யும் நேர்த்தியைக் கண்டதினால்
வார்த்தேனே வெண்பாவில் வாழ்த்து
(10)

✍️செ.இராசா

No comments: