21/12/2020

வள்ளுவர் திங்கள் 141----------மயக்கும் மொழி

 


#அவன்_பேசிய_வார்த்தைகள்

தன்னிகர் இல்லாத் தமிழ்போல் அழகினில்
உன்னிகர் இல்லா உலகு

கம்பனில் கண்ட கவின்போல் சிரிக்கையில்
சிம்பொனி போன்ற சிலிர்ப்பு

பாரதி ஏற்றிய பாபோல் சினக்கையில்
பேரிகை கொட்டிடும் பேச்சு

வள்ளுவன் செய்த வரிபோல் அடிஅடி
உள்ளத்தைத் தூண்டும் உணர்வு

இராஜா இசையின் இதம்போல் இரவில்
இராஜாங்கம் செய்யும் எழில்

#நினைவு_திரும்புதல்

உயர்த்தி உயர்த்தி உசுப்பிடும் பேச்சு
மயங்கிட வைக்கும் மது

மயக்கும் மொழியால் மனதை மயக்கி
வியந்தபின் வைத்தான் விதை

விதைத்தது வேகமாய் வேர்விடும் முன்னே
அதைவிட்டுப் போனான் அயல்

அயலகம் சென்ற அவனையே எண்ணி
மயங்கிக் களிக்கும் மனம்

#அவன்_திரும்பிவந்தபோது

பிரிந்தோன் திரும்பினான் பேசவே இல்லை
எரிந்து குளிர்ந்த இரவு

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_141
#மயக்கும்_மொழி

No comments: