30/01/2020

கொரோனாக் கிருமியாய்க்===#குறள்_அந்தாதி


#குறள்_அந்தாதி

#ஆண்:

கொரோனாக் கிருமியாய்க் கொல்கின்ற பெண்ணே
உரோமமா எந்தன் உசுரு?!

#பெண்:

உசுரென எண்ணித்தான் ஒட்டினேன் உன்னை
பொசுக்கெனச் சொன்னாயே போ!!

#ஆண்

போய்விடச் சொன்னாயே போக்கிடம் சொல்பெண்ணே
நாய்போல் அலையவா நான்

#பெண்:

நானென்றும் சொல்லலையே நாராச வார்த்தையினை
ஏனென்னைச் சீண்டுகிறாய் இன்று

#ஆண்

இன்றோடு கைப்பிடித்(து) தெத்தனைநாள் ஆனதடி
இன்றைக்கும் சண்டையெனில் ஏன்?

#பெண்:

ஏனென்றாக் கேட்கின்றாய் என்னிடம் இக்கேள்வி
தேனென்று போனாயோ? சீ!

#ஆண்

சீயென்று சொல்லியெனைச் சீண்டுகிறாய் நீயென்னைத்
தீயென்று காட்டுவதேத் தீர்வு!

#பெண்:

தீர்வில்லாக் காவிரிபோல் தேராத நின்பேச்சை
யார்வந்து கேட்பாரோ இங்கு?

#ஆண்

இங்கொன்றும் அங்கொன்றும் என்றைக்கும் போகாதத்
தங்கத்தைத் தீதுரைத்தல் தப்பு!

#பெண்:

தப்பென்றால் தப்பென்பேன் தப்படித்தல் தீதென்பேன்
எப்போதும் நீதான் எனக்கு!

✍️செ. இராசா

No comments: