25/11/2018

இயற்கை ஆடிய ஆட்டத்திலே


நிலத்தைத் தொடாத காவிரியால்
நிம்மதி போனது கொஞ்சமென்றால்
நிலத்தைத் தீண்டிய பெருங்காற்றால்
நிழலும் இங்கேத் தொலைஞ்சிடுச்சே...

தஞ்சையில் விளைந்த பொன்னிக்கு
தரணியில் மதிப்பு அதிகமென்று
நஞ்சையில் போட்ட முதலெல்லாம்
நட்டத்தின் கணக்காய் மாறிடுச்சே..

தென்னம் பிள்ளையை நம்பிநின்ற
அண்ணன் பிள்ளைகள் எல்லாமே
இன்னும் எதுவும் உண்ணாமல்
கண்ணீர்க் கடலில் மிதக்கிறதே..

ஆட்டையும் மாட்டையும் நம்பிநின்ற
ஆயிர மாயிரம் குடும்பங்கள்
அனைத்து உயிரையும் பறிகொடுத்து
அமைதியை இழந்து நிற்கிறதே...

இயற்கை ஆடிய ஆட்டத்திலே
இழந்தது அதிகம் உறவுகளே...
இருந்தும் இனிநாம் என்னசெய்ய
இதயத்தை வலுவாய் மாற்றிடுவோம்

இறைவன் போட்ட கணக்கினிலே
இதுயென்ன கணக்கோ தெரியவில்லை
இருந்தும் இனிநாம் என்னசெய்ய
இணைந்தே மீண்டு(ம்) வந்திடுவோம்...

#கொடுப்பது_நம்_கடமை_உறவுகளே
✍️செ. இராசா

No comments: