05/01/2018

மௌனத்தின் வார்த்தைகள் அறியாயோ?!---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (87) பங்குபெற்ற கவிதை


மனமே மனமே நல்மனமே- நீ
மௌனத்தின் வார்த்தைகள் அறியாயோ?!
மௌனத்தை அறிந்தால் நல்மனமே- நீ
மௌனமாய் எமக்கும் சொல்வாயோ?!

தினம்தினம் ஆயிரம் கதைப்போரே- உள்
மனம்கூறும் வார்த்தைகள் மறந்தீரோ?
சினங்களால் சீறிடும் மாந்தர்களே- நீர்
மௌனத்தின் வார்த்தைகள் மறந்தீரோ?

புத்தரின் பல்லினைக் காப்பவரே- அவர்
சித்தமே மௌனம் மறந்தீரோ?
சத்திய காந்தியை அறிந்தவரே- அவர்
சக்தியே மௌனம் அறிவீரோ?

பக்தியின் நாமங்கள் சொல்பவரே- இறை
பக்தியின் மௌனத்தை மறந்தீரோ?
ஆத்திக வாதங்கள் செய்பவரே- நீர்
ஆன்மாவின் மௌனத்தை அறிவீரோ?

சூனிய இரகசியம் அறிவதற்கு- அதன்
சூத்திரம் யாதனெ அறிந்திடுவோம்!
சூட்சுமம் தெளிவுறப் புரிவதற்கு- நாம்
சூனிய மௌனத்தை கடைப்பிடிப்போம்!

எச்சில் படாத வார்த்தைகளால்- நாம்
எண்ணத்தில் மௌனமாய் பேசிடுவோம்!
எங்கும் இருக்கின்ற இறைநிலையை- நாம்
ஏகாந்த மௌனத்தில் உணர்ந்திடுவோம்!

——-செ.இராசா——

No comments: