08/04/2023

சென்னை ------குறள் வெண்பாக்கள்

 


காசு பணமென்று கண்டபடி ஓடுவதால்
தூசு பறக்குதிங்கே சூழ்ந்து
(1)
 
ஏழுமணி என்பதுதான் இங்கே அதிகாலை
வாழும் முறைசொன்னால் வம்பு
(2)
 
முன்னிரவில் உண்ணாமல் மூச்சுமுட்ட எல்லோரும்
பின்னிரவில் உண்ணுகிறார் பேர்க்கு
(3)
 
சாப்பிட்ட வேகத்தில் சட்டென்று தூங்குவதால்
கூப்பிடா நோயெல்லாம் கூட்டு
(4)
 
மக்களின் வெள்ளத்துள் மாநகரம் நின்றாலும்
மக்களாட்சி என்பதுதான் மாண்பு
(5)
 
எங்கெங்கு காணினும் ஏராளப் பூங்காவாய்
இங்குள்ளோர் செய்த எழில்
(6)
 
உழைக்காமல் இங்கே உறங்குவோர் இல்லை
சளைக்காமல் ஓடும் சனம்
(7)
 
சின்னத் தெருவுக்குள் செல்கின்ற ஊர்திகள்
என்னே அழகய்யா இங்கு?
(8)
 
ஊபரும் ஓலாவும் உண்மைமிகு நட்பைப்போல்
ஆபத்தில் வந்துதவும் அங்கு
(9)
 
தொழில்முனைவோர் எல்லாம் தொடர்ந்திங்கே வந்தும்
எழில்கூடும் சென்னை இது!
(10)
 
✍️செ. இராசா

No comments: