11/07/2019

#மணல்_கடிகாரம்



இன்று ஓரு பயணத்தில் எந்தப் புத்தகம் படிக்கலாம் என்று யோசித்தபோது, கவிஞர் பனிப்பூக்கள் பார்த்திபன் அனுப்பிய “மணல் கடிகாரம்” என்ற புத்தகம் ஞாபகம் வந்தது. மிகவும் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன், ஆனால் படிக்கப்படிக்க மெய்சிலிர்த்து உறைந்து போனேன்.

அணிந்துரை “பா. விஜய்” எழுதி இருந்தார்கள். தயவுகூர்ந்து மன்னிக்கவேண்டும்; பொதுவாக பெரிய கவிஞர்கள் ஏதோ பெயருக்குத்தான் எழுதி இருப்பார்கள் என்றே நினைத்துப் படித்தேன். ஆனால், என் நினைப்பை முற்றிலும் பொய்யாக்கி விட்டார்கள். அத்தனை பெரிய நல்ல உள்ளங்களும், கவிஞரின் மெய்யான வரிகளுக்கு மெய்யான உரை எழுதியுள்ளார்கள்.

அனைத்து கவிதைகளும் மிகஅற்புதமாக இருந்தாலும், அதில் நான் மிகவும் ரசித்த கவி வரிகளை மட்டும் இங்கேச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்....

1. மரத்தின் குச்சிகள்
மரத்திற்கேத் திரும்புகிறது
பறவையின் கூடு.....அருமையான கோணத்தில் அணுகிய பார்வை!

2. கொத்துவதற்கு மரங்களின்றி
தன் சிறகுகளைக் கொத்திக்கொள்கிறது
மரங்கொத்தி........மரத்தின் பெருமையை இதைவிட எப்படி சொல்ல முடியும்?!

3. இழுத்து மூடிய ஸ்டெர்லைட் ஆலையின் பூட்டில் தொங்குகிறது
இறந்தவர்களின் ஆன்மாக்கள்.......வேதனையின் உச்சமான வரிகள் இவை.

4. எதிர்வீட்டுக் குழந்தைக்கு
எப்படிச் சொல்வேன்
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று......
உண்மை.....ஆவணக்கொலைகள் இன்னும் நடக்கும் இந்த சமூகத்தில் சாதிகள் இன்னும் இருக்கிறதே?!!

5. பசியை ஆகாயத்தில்
பறக்க விடுகிறான்
பலூன் வியாபாரி.......பசியின் சுவாசத்தில் பறக்க விட்ட பலூன்கள் விற்காவிடில், அவன் பசி எப்படி அடங்கும்?!!...என்ன ஒரு பார்வை?!!

6. ரேசன் அட்டையில்
பொம்மையின் பெயரை
இணைக்கச் சொல்லி
அடம்பிடிக்கிறது குழந்தை.....கவிஞர் குழந்தையாக மாறாவிடில் எப்படி இப்படைப்பு வரும்?!! அருமை

7. திருநங்கைக் கவிதையில் இந்தச் சமூகத்திற்கு சரியான சாட்டையடி..,ஆம் “நீங்கள் உருவாகத் தேவையான அங்கம்தானே அங்கும்” பொளேர் என அறைகிறார் கவிஞர்.

8. ரெட்ஓயின் நிரம்பி விழியும் மதுக்கோப்பை ரோஜா....என்ன ஒரு கலைநயப் பார்வை!

9. வயது என்கிறக் கவிதையில் கவிஞரின் பயணம் தன் வயதையும் தாண்டிப் பயணிக்கிறது...அது “அடித்த டையில் மறைமுகமாய்த் தெரிகிறது வெள்ளை மீசை” என!

10. கடலில் மிதக்கும் சிலந்திவலை “ஆக்டோபஸ்” அருமையான ஒப்பீடு.

11. ஒரு நிமிட சுதந்திரத்தின் விலை பத்து ரூபாய் கூண்டுக்கிளிக்கு....ஆகா ஆகா செம்ம!

12. ஒரு கவிதையில் விழுந்த பூவை புயல் காற்று ரசிக்கிறது. அதுவும் புத்தரின் ஞான நிலையில்....!

13. இன்று அனைவரும் ஆழ்மயக்க நிலையில்...காரணம் ஆண்ட்ராய்டு என உண்மையைத் தெறிக்க விடுகிறார் கவிஞர்.

14. குயவன் இரு பானைகள் படைத்துவிட்டு அடுத்த பானை செய்ய கிளம்பிவிட்டான். ஆனால் ஒரு கூட்டம் எப்பானை உயர்வு என்று அடித்துக்கொள்கிறதாம். சே..எவ்வளவு உயர்ந்த கருத்தை எவ்வளவு எளிதாகச் சொல்லி உள்ளார் என நான் வியந்து வியந்து உருகிய கவிதை இது.

15. “ஒற்றை இலக்கை// இனவிருத்தி செய்கிறது// பூஜ்ஜியம்” என்கிற கவிதையில் அசந்துபொனேன். கவியரசர் சொன்ன “பூஜ்ஜியத்துக்குள்ளே ராஜ்ஜியம் செய்து புரியாமல் இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் நீ இறைவன்” என்ற வரிகள் ஞாபகம் வந்தது. அதுமட்டுமா?!! இந்த உலகமே சூனியம் அல்லது சுத்தவெளியில் இருந்துதானே வந்தது.

16. ராணுவ வீரன் பற்றிய கவிதையில் “நிராயுதபாணியான என்னை நீ என் நினைவுகளால் சுடுகின்றாய்” என்று வள்ளுவரை நெஞ்சோடு புலக்க வைக்கிறார் கவிஞர்.

17. மாங்கல்யம் ஏறும் வரை தன் முன்னால் காதலியாக மாறப்போகும் தேவதையை ரசிக்கும் கவிதை நிதர்சனம்.

18. காதலித்தால் என்ன என்ன நடக்கும் என எழுதியதில் வைரமுத்துவையேத் தாண்டிவிட்டார் என்றால் அது மிகையல்ல.

19. ஆற்றில் மீன்பிடித்த சமுகம், ஆற்று மணலில் நண்டுபிடுத்து, ஆற்றின் சுவடுகளைத் தேடுகிறது.....உண்மை தானே?!!

20. யாதுமாகி என்ற கவிதையில் “எங்கும் நிறைந்தவனே கவிஞன்” என மிகத் தெளிவான வரிகளில் தன்னைக் காட்டிவிடுகிறார்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.

உண்மையில் இந்த “மணல் கடிகாரம்” என்னைப் புரட்டிய ஞானக் கடிகாரம்......அருமையான புத்தகம். கவிஞர் பனிப்பூக்கள் பார்த்திபன் மிகச் சிறந்த கவிஞராகத் தன் படைப்பைத் தந்துள்ளார்கள். மேலும் மேலும் அவர் படைப்புகள் தொடர வேண்டும் என வேண்டி விடைபெறுகின்றேன்.

#மணல்_கடிகாரம்
என் மமதை அழித்த கடிகாரம்
என் காலத்தை உணர்த்திய கடிகாரம்
என் மனதை வென்ற கடிகாரம்
நீங்களும் படியுங்கள்
உங்களையும் புரட்டும்
இது சத்தியம்......

இப்படிக்கு

செ. இராசா