23/07/2019

#இலங்கை_ஜெயராஜ் ஐயா








அணு அணுவாய் ரசித்தவரை
அருகில் இருந்து பார்க்கையிலே
ஆயிரம் அழுத்த மின்சாரம்
அகத்தின் அடியில் பாய்வதுண்டு!
அப்படி ஒருவரின் சந்திப்பு
எப்போ என்றோ நடப்பதுண்டு!

திருக்குறள் என்னுள் ஊற்றியவர்!
திருவாசகம் யாதெனக் காட்டியவர்!
ஔவை சேக்கிழார் யாவரையும்
அழகாய்த் தமிழால் ஊட்டியவர்!
கம்பனில் முழுதாய்க் கரைந்தவர்!
கம்ப வாரிதியாய் மாறியவர்!

#இலங்கை_ஜெயராஜ் ஐயாவை
இலக்கிய உலகம் கொண்டாடும்
நிகழ்வை அறிந்த மறுகணமே
அகத்தில் ஆயிரம் பேரின்பம்!
கண்ணில் கண்ட அக்கணமே
என்னுள் கோடி உற்சாகம்!

காணொளி மூலம் கண்டவரை
கண்ணை என்னுள் திறந்தவரை
காணும் வாய்ப்பு கிட்டியதும்
கண்ணில் கண்ணீர் முட்டியது!
ஆகா..ஆகா..ஆனந்தம்!!
ஆயுள் முழுமைக்கும் ஆனந்தம்!!

✍️செ. இராசா

(நேற்று புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்திய விழாவில் அவரின் அழகிய சொற்பொழிவில் கரைந்த தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று)

No comments: