08/06/2023

சபலம்

 #சபலம்

கண்ட மாத்திரத்தில்
நெஞ்சில் தோன்றும் பிரளயம்!
எண்ணிய நேரத்தில்
எங்கிருந்தோ வரும் பூகம்பம்!
அடக்கம் தளர்கையில்
அளவுமீறி உடையும் அணைக்கட்டு!
மயக்கம் படர்கையில்
மதிமீறிப் பாயும் காட்டாறு!

சிறு பொறி போதும்
காட்டுத்தீ பரவ‌‌...
சிறு ஓட்டை போதும்
பெருங்கப்பல் கவிழ..
சிறு சபலம் போதும்
பெரும்‌..மனிதன் வீழ‌‌...

இங்கே..
மேனகைகள் ஆட
விஸ்வாமித்திரர்கள் வீழலாம்
ஆனால்
இந்திரர்களின் சபலத்திற்கு
அகலிகைகள்தான் கிடைத்தார்களா?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

ஒரு சின்ன மயிறிலை போதும்
வைரங்கள் கூலாங்கற்க‌ளாக...
முத்துக்கள் வேணாமென்றாக

ஒரு சின்ன துருப்புபோதும்
சாம்ராஜ்யங்கள் சரிய...
காமராஜ்யங்கள தெரிய.

இங்கே அனைவரும் உத்தமர்கள்தான்
பிம்பம் உடையாதவரை......
இங்கே அனைவரும் நல்லவர்கள்தான்
சபலம் தழுவாதவரை..

சபலம்..
பலத்தைக் கெடுக்கும் தீயுண்ணி
நலத்தைக் கெடுக்கும் நாயுண்ணி

கவனம்...

✍️செ. இராசா

No comments: